tamilnadu

img

அப்பராசப்புத்தூர் மக்களுக்கு 2வது நாளாக உணவு வழங்கிய சிபிஎம்

மயிலாடுதுறை, நவ.15 - மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் முக்கூட்டு அருகேயுள்ள அப்பராசப்புத்தூர் கிராமத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியக் குழு சார்பில் தொடர்ந்து 2 ஆவது நாளாக உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். வீடுகளை சுற்றி மழைநீர், வீடுகளுக்குள் தண்ணீர் என கடும் சிரமத்தில் உள்ள அப்பராசப்புத்தூர் கிராம மக்கள், தங்களுக்கு வட்ட நிர்வாகம் சார்பில் முகாம் அமைத்து அடிப்படை தேவைகளை செய்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று காலை முதல் உணவு சமைத்து மக்களுக்கு வழங்கும் பணியை துவங்கினர். அதனையறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மக்களுக்கான பணியை சீர்குலைக்கும் விதமாக பேசிய நிலையிலும், ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் 3 வேளை உணவு வழங்கும் பணியில் தொடர்ந்து 2 ஆவது நாளாக செவ்வாயன்று ஈடுபட்டனர். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல்கூட சொல்லாத வருவாய்த் துறையினர், அடிப்படை தேவைகளை செய்து தராமல் அலட்சியப்படுத்தி வருவதால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உணவு வழங்கும் இயக்கத்தை தொடங்கியுள்ளோம் என ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறினார்.