ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருசக்கர வாகன பிரச்சாரம், நடைபயணம்
ஜுன் 11-20 இல் நடத்த சிபிஎம் முடிவு
அரியலூர், மே.17- மோடி அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக ஜுன் 11 முதல் 20 ஆம் தேதிவரை சிபிஎம் சார்பில், இருசக்கர வாகன பிரச்சாரம் மற்றும் நடைபயணம் மேற்கொள்வது என மாவட்டக் குழு முடிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஎம் மாவட்டக்குழுக் கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. பரமசிவம் தலைமையில், சிபிஎம் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் முன்னிலையில் அரியலூர் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கலந்து கொண்டு மாநிலக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைக்கு எதிராக ஜுன் 11 முதல் 20 ஆம் தேதிவரை இருசக்கர வாகன பிரச்சாரம் மற்றும் நடைபயணம் நடத்துவது என மாநிலக் குழு மூலம் மாவட்டக் குழு முடிவு செய்யப்பட்டு அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகளில் நடைபயணத்தை துவங்கி பிரச்சாரம் செய்வது எனவும், மற்ற இடைக்குழுக்கள் சார்பில், இருசக்கர வாகனத்தின் மூலமாக கிளைகள்வாரியாக பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜுன் 17 ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் நடை பயணம் மற்றும் வாகன பிரச்சாரமும், ஜுன் 15 ஆம் தேதி அரியலூர் நகராட்சியில் நடை பயணம் வாகன பிரச்சாரமும், ஜுன் 17 ஆம் தேதி ஆண்டிமடத்திலும், ஜுன் 20 ஆம் தேதி திருமானூரிலும், ஜுன் 11 ஆம் தேதி தா.பழூரிலும் நடைபயணம் மற்றும் இருசக்கர வாகன பிரச்சாரமும் நடத்துவது எனவும், தீக்கதிர் சந்தா ஜூலை 1 முதல் 10 ஆம் தேதி வரை சந்தா சேகரிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்துவது, ஜெயங்கொண்டத்தில் நூறு ஆண்டு சந்தாவும், அரியலூரில் நூறு ஆண்டு சந்தாவும் மற்ற இடைக்கமிட்டிகள் தலா 75 ஆண்டு சந்தாவும், மின்னரகம் சார்பாக 33 ஆண்டு சந்தாவும் சேர்ப்பது என முடிவு செய்து தீர்மானிக்கப்பட்டது.