tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பொன்னமராவதி பேரூராட்சியின் செயலுக்கு சிபிஎம் கண்டனம்

பொன்னமராவதி, மே 17 - மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி இளந்திரையன், அரசியல் கட்சிகள் மற்ற இயக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வைத்துள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என 27.01.2025 அன்று உத்தரவு பிறப்பித்தார்.  இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிரானது என்பதை குறிப்பிட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 21.04.2025 அன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் இறுதி தீர்ப்பு வரும் வரை தடையாணை உத்தரவு கோரப்பட்டுள்ள நிலையில், இதற்கு  சிபிஎம், சிஐடியு உள்ளிட்ட கொடிக் கம்பங்களை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அகற்றிய பொன்னமராவதி பேரூராட்சி நிர்வாகத்தின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கடும் கண்டம் தெரிவித்துள்ளது.

பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூர், மே 17 -  ஒன்றிய அரசின் மூலமாக பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000/- அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தில் 20 ஆவது தவணை வரும் ஜூன்-ஜூலை மாதத்தில் வழங்கப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து தகுதியான விவசாயிகளும் பி.எம்.கிசான் திட்டப் பலன் தொடர்ந்து கிடைக்க பெற விவசாயிகள் இ.கே.ஒய்.சி. (e.KYC) மற்றும் தங்கள் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் சீடிங் (Aadhar Seeding) மற்றும் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண்ணை பெற்று இணைக்க வேண்டும்.  இம்மூன்று பணிகளை முடித்த பயனாளிகளுக்கே அடுத்து வரும் பி.எம். கிசான் திட்டத் தவணைகள் கிடைக்கப் பெறும். பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 4,469 பயனாளிகள் இ.கே.ஒய்.சி. செய்யாமல் உள்ளனர். இவர்கள் ஆதார் அட்டை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி இ.கே.ஒய்.சி. செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.  வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண் சீடிங் செய்யாமல் 2,990 பயனாளிகள் உள்ளனர். இவர்கள் இந்தியா போஸ்ட்பேமண்ட் வங்கியில் புதிதாக வங்கி கணக்கு துவங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.   மேலும், விவசாயிகள் தற்சமயம் நடைபெற்று வரும் பி.எம். கிசான் சிறப்பு முகாமில் இத்திட்டம் தொடர்பான தங்களது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.  மே 31 ஆம் தேதி வரை இம்முகாம்கள் நடைபெற உள்ளன. விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சப்பரத் திருவிழாவில் தகராறு: 4 பேர் கைது

தஞ்சாவூர், மே 17 -  தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை பகுதி ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய சப்பரத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது போதையில் வந்த சிலர், சாலையை மறித்துக் கொண் தகராறு செய்தனர்.  இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், அதே கிராமத்தைச் சேர்ந்த எஸ். ஸ்டாலின் (30) பெரிய கத்தியால் வெட்டப்பட்டார். தலையில் காயமடைந்த இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.  இது தொடர்பாக கிராம மக்கள் முதன்மைச் சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நடுக்காவேரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து அம்மன்பேட்டையைச் சேர்ந்த ஒய். கீர்த்திராஜன் (24), கே.சூர்யா (20), இ.பிரேம்குமார் (22), ஏ.அபிஷேக் (20) ஆகியோரை புதன்கிழமை இரவு கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.