tamilnadu

கந்து வட்டி கொடுமை குறித்து விசாரிக்க சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில், மே 19-ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தால் தொழில் நஷ்டம் ஏற்பட்டு கந்து வட்டி கொடுமைக்கு உள்ளாகி தாய், மனைவி, மகளுடன் தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அது குறித்து விசாரிக்கவும், உண்மையை திசை திருப்பும் நோக்கத்துடன் செய்தி பரப்புவதை கைவிடுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர், விக்னேஷ்வரா என்ற பெயரில் பிஸ்கட், டிஷ் டிவி போன்றவை மொத்த வியாபாரம் செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார். 25 தொழிலாளர்கள் இவரது நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி வரிவிதிப்பும் இவரது தொழிலை பாதிப்புக்குள்ளாகியது. தொழிலில் ஏற்பட்ட தொடர் நஷ்டத்தை கடன் வாங்கி சமாளித்து வந்துள்ளார். கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையிலும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் கொடுத்துள்ளார்.இந்நிலையில் சுப்பிரமணி, அவரது மனைவி ஹேமா (48), மகள் ஷிவானி (20), சுப்பிரமணியின் தாய் ருக்மணி (72) ஆகியோர் படுக்கை அறையில் இறந்து கிடந்தனர். ஷிவானி குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். அவர்கள் அனைவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்திருப்பதும், அந்த விஷம் கூரியர் மூலம் வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த ஏஎஸ்பி ஜவஹர், தற்கொலை செய்து கொண்ட சுப்பிரமணியின் உறவினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். வடசேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.சிபிஎம் கோரிக்கைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி வரிவிதிப்பும் ஏராளமான சிறு குறு தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களின் உயிரைப் பறித்துள்ளது. தொழில் நஷ்டம் ஏற்படும் சூழலில் வேறு வழியின்றி கந்து வட்டி கொடுமைக்குள் சிக்கி பலர் இன்னமும் நடைபிணமாக உள்ளனர். இத்தகைய சமூக-பொருளாதார கொடுமைகளை கண்டுகொள்ளாமல் செய்தி பரப்பி குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தொழில் அதிபர் சுப்பிரமணி குடும்பத்தினர் கூட்டாக தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை கண்டறிந்து இத்தகைய சம்பவம் நடைபெறாத வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.