tamilnadu

img

ஆதீன மடங்களின் சொத்துக்கள்  அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களின் தலைவர்கள், ஆதீன மட சொத்துக்கள் குறித்த விபரங்கள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி செங்கோல் ஆதீனத்திற்குச் சொந்தமான பல ஏக்கர்நிலங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங் களில் உள்ளன.இந்த நிலங்களில் வந்த வருமானங்களைக் கொண்டு, சமயப் பணிகளையும், தொண்டுகளையும் செய்து வந்தது.சமீப காலமாக இந்த பணிகள் முறையாகச் செய்யப்படாத நிலையில், ஆதீனத்திற்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், கோவிலுக்கு வருமானம் இல்லாமல் போனதும், அதனால் பணிகள்தடைபட்டதும் தெரிய வந்தது.இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்ட நிலையில்,  ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி  அதிகாரிகளிடம் மனு அளித்தேன். 

இந்து அறநிலையத்துறை இணைஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில், இது வரைநடவடிக்கை இல்லை. ஆகவே, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டஆட்சியர்கள், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோரைக் கொண்ட குழு அமைத்து செங்கோல் ஆதீனத்திற்குச் சொந்தமான நிலங்களை அளக்கவும் அவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும்உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். ந்த வழக்கை 2018-ஆம் ஆண்டுபிப்ரவரியில் விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களின் தலைவர்களை எதிர்மனுதாரர்களாகச் சேர்த்தும், அவர்கள் ஆதீனச் சொத்துக்கள் குறித்த விபரங்களை பதிவுத்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கவும்,  பதிவுத்துறைத் தலைவர் அதனை உறுதி செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை திங்களன்று விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, செந்தில்குமார், ராமமூர்த்தி அமர்வு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.