சென்னை, மார்ச் 20 - தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அனைவரும் விரைந்து இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலி யுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் 25வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் நடைபெற்ற 25வது மெகா தடுப்பூசி முகாமில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 459 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர் 5 கோடியே 32 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 4 கோடிக்கும் மேற்பட்டோர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 92 விழுக்காடு பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 80 விழுக்காடு பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 12 - 14 வயதுடையவர்களில் 4.29 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் 51 லட்சம் நபர்கள் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். 1.34 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது. உலக நாடுகளில் கொரோனா 4ஆம் அலை பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே, கொரோனா தோற்று விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் மற்ற நாடுகளைப் போல் இந்தியாவும் தொற்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகும்.
தேடிச் சென்று தடுப்பூசி
முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்களன் பட்டியல் தயார் செய்யப்பட்டு, தேடிச்சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது என்று குறிப்பிட்ட அவர், தடுப்பூசி அதிக அளவில் கையிருப்பில் இருந்தாலும் அதை செலுத்திக் கொள்ள பொதுமக்களில் சிலர் தயக்கம் காட்டுகின்றனர். முககவசம் அணிவதை தற்பொழுது மக்கள் மறந்து வருகின்றனர். இது தவறு. தமிழகத்திலும் கொரோனா 4ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால் முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.