சென்னை, ஜுன் 23 - பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின், சென்னை திரும்பிய பின் செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவரிடம் எழுப்பப் பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்து கூறியதாவது: “ஜனநாயகத்தைக் காக்கவே பாட்னாவில் பல்வேறு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டம் மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக இருந்தது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைவதில் தடையாக உள்ள 7 முக்கியப் பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என்றேன். மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம். எனவே, தமிழ்நாட்டைப் போல அகில இந்திய அளவிலும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் முக்கியம் என்றேன். மாநிலங்களில் எந்தக் கட்சி வலுவாக உள்ளதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். கூட்டணி அமையாவிட்டால் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம். அதற்கும் வாய்ப்பு இல்லாவிட்டால், பொதுவேட்பாளரை நிறுத்தலாம். தேர்தலுக்குப்பின் கூட்டணி என்பது கூடாது என்று நான் கூறினேன். பாட்னா கூட்டத்தை, பாஜக என்ற தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டமாக பார்க்கக் கூடாது. நாட்டின் பன்முகத் தன்மை, ஏழை மக்களின் நலனைக் காக்க வேண்டுமானால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. அதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப் பட்டுள்ளது. 2023 ஜூன் மாதம் கூடினார்கள், 2024 மே மாதம் வெற்றிபெற்றார்கள் என்பதுதான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்றேன். நிச்சயமாக பாஜக தோற்கடிக்கப் படும்”. இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.