tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யா நினைவகத்திற்கு அடிக்கல் - ஒரே நாளில் ரூ.3 லட்சத்துக்கும் மேல் குவிந்த நிதி!

கோவை, டிச.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னூர் ஒன்றியக்குழு அலுவலக கட்டிடமான தோழர் என்.சங்கரய்யா நினைவகம் கட்டும் பணிக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அடிக்கல் நாட்டினார். கோவை மாவட்டம், அன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு அலுவலக கட்டிடமான தோழர் என்.சங்கரய்யா நினைவகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. கட்சியின் அன்னூர் ஒன்றியக்குழு செயலாளரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான மணிகண்டன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு, கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  அப்போது அவர் பேசுகையில், அன்னூர் ஒன்றியக்குழு அலுவலக கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காண ஏதுவாக தோழர்கள் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

நாவடக்கத்தை சகாக்களுக்கு கற்று கொடுக்கட்டும்

ஒன்றிய இணையமைச்சர் ஒருவர் செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு, “ஏடிஎம் மெஷினா வைத்துள்ளோம்” என்ற நாவடக்கமில்லாத பதிலுக்குத்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்வினையாற்றியுள்ளார். இதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. நாவடக்கம் குறித்து பேசும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்களது அமைச்சரவை சகாக்களுக்கு அதனை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அலுவலக கட்டிட கட்டுமான பணிக்கான நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் வழங்கினர். முதல் தவணை நிதியாக ரூ.3 லட்சத்து 27 ஆயிரம் வசூலானது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், அவிநாசி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், கே.எஸ்.கனகராஜ், அன்னூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் முஷீர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.