tamilnadu

img

சிபிஎம் மூத்த தலைவர் - மேடைக் கலைவாணர் தோழர் என்.நன்மாறன் முதலாமாண்டு நினைவஞ்சலி

மதுரை, அக்.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணைத்தலைவரும் மேடைக் கலைவாணர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தோழர் என். நன்மாறன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி அக்டோபர் 28 வெள்ளியன்று பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நினைவஞ்சலியில் அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.ராமகிருஷ்ணண், என்.அமிர்தம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.பாலா, துணை மேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வசந்தன், ஜா.நரசிம்மன், இரா.லெனின், எம்.பாலசுப்பிரமணியம், டி.செல்வராஜ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் , தோழர் நன்மாறன் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். 

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில்  மதுரையில் 30 இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை செயின்ட்  மேரிஸ் சர்ச் முன்பாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு சிறுபான்மை நலக்குழு மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் த.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.  அருட்தந்தையர்கள் பெனடிக்ட் பர்ணபாஸ், மரியநாதன் சாமிக்கண்ணு,  சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மாமன்ற உறுப்பினர்கள் எம். மாயழகு, டி.குமரவேல், இந்திய யூனியன் முஸ்லிம்  லீக் மகளிர் அணி மாவட்டத் தலைவர் பேராசிரியர் பாத்திமா நிஷா, நலக்குழு  மாவட்ட செயலாளர் என்.கணேச மூர்த்தி, துணைச் செயலாளர் ஏ. போனிபேஸ், மாவட்ட துணை செயலாளர் வேல்தேவா, மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

இதில் பேசிய அருட்தந்தையர்கள், எளிமைக்கு இலக்கணமாக கக்கன், காமராஜர் போன்றவர்களை பாடப் புத்தகங்களில்தான் நாம் படித்து தெரிந்து கொண்டோம். ஆனால் நேரில் எளிமையின் இலக்கணமாக பார்த்து பழகிய தலைவர் தோழர் நன்மாறன். மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கும்  சிறுபான்மை மக்களுக்கும் தெரிந்த ஒரு உன்னதமான எளிமையான தலைவர்தான் தோழர் நன்மாறன். இறுதி காலம் வரை சுதந்திரப் போராட்ட வீரர் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களுக்கு அரசு மரியாதை செய்ய வேண்டும் என்று அனைத்து தலைவர்களையும் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். இது சிறுபான்மை மக்கள் மீது அவர் வைத்துள்ள மதிப்பும் மரியாதையையும் காட்டுகிறது. இந்த நேரத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று கூறினர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் மேலப்பொன்னகரம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகம் அருகில்   நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன், மாவட்டத் தலைவர் பி. வீரமணி  மற்றும் சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். தெய்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வடக்கு - 1, மத்திய - 2, மேற்கு - 1 ஆம் பகுதிக்குழுக்கள் சார்பிலும் நகரில் பல்வேறு பகுதிகளிலும்  அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.