மதுரை, டிச. 12 - ‘எல்.ஜி.’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தோழர் எல்.கோபால கிருஷ்ணன், டிசம்பர் 15 அன்று தமது நூற்றாண்டை எட்டுகிறார். ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் முதல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடங்கி மாஸ்டர் வ.ராமுண்ணி மேனன், ஒய்.வி.சுப்பாராவ் முதலான மூத்த தலைவர்களுடன் இணைந்து பணி யாற்றியவர் எல்.ஜி. ஜில்லா போர்டு காலத்தில் ஆசிரியர் நலன்களுக்காகப் போராடிய போது வெகு தூரத்தில் உள்ள கொடைக்கானல் மலை கடைக்கோடி கிராமமான கவுஞ்சிக்கு மாற்றப்பட்டு பழிவாங்கப்பட்டார். எனினும் மனந்தளராமல் சங்கப்பணிகளைத் தொடர்ந் தார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் களாக இருந்த தலைவர்கள் ஏ.பாலசுப்பிர மணியன், என்.வரதராஜன், கே.பி. ஜானகி யம்மாள், ஏ.நல்லசிவன், கோ.வீரய்யன் முதலானவர்களின் உதவியுடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை அமைப்பதிலும், வளர்ப்பதிலும் முழுமூச்சு டன் ஈடுபட்டார்.
மதுரை மேற்கு வட்டாரச் செயலாளராக திறம்பட செயல்பட்டார். கான்பூரில் நடந்த சிஐடியு அகில இந்திய மாநாட்டில் ஒரு பார்வையாளராக கலந்து கொண்டார். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற போது மதுரை, கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். சங்க ஜனநாயகத்திற்கான போராட்டங் களின் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உதயமான போது அதில் முன்நின்றார். தமிழகத்தில் ஜாக்டா, ஜாக்சாட்டோ, ஜாக்டீ, ஜாக்டீ - ஜியோ முதலான கூட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அகில இந்திய அள வில் சிசிஎஸ்டிஓ (CCSTO), இந்திய பள்ளி ஆசிரியர் சம்மேளனம் (STFI) ஆகிய வலிமை யான அமைப்புகளை உருவாக்குவதிலும் முன்நின்றார். பல தலைவர்களை உரு வாக்கிய தலைவராக விளங்கினார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கும் புதிய ஆசிரியன் என்னும் இடதுசாரி, முற்போக்கு பல்சுவை மாத இதழ் மதுரையில் இயங்கியபோது அதன் தொடக்க கால ஆசிரியராகவும், வெளியீட்டாளராகவும் எல்.ஜி.பணியாற்றினார்.
ஆசிரியர் இயக்கத்தின் முன்னோடியான தோழர் எல்.ஜி. அவர்கள், வரும் டிசம்பர் 15 அன்று (வியாழன்) தமது நூறாவது வயதை எட்டுகிறார். வாழும் வரலாறாக நூற்றாண்டு காணும் தோழர் எல்.ஜி., ஆரம்பப்பள்ளி ஆசிரியர் இயக்கத்திற்கு என்றென்றும் வழிகாட்டும் ஒளி விளக்காக திகழ்கிறார் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ச.மயில் குறிப்பிட்டுள்ளார். தற்போது திருச்சியில் வசித்து வரும் தோழர் எல்.ஜி.க்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அவர்களில் விஜயலட்சுமி, சந்திர சேகர், அகிலா, ரமேஷ் ஆகியோர் தீக்கதிர் நாளிதழில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் விஜயலட்சுமி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர்களில் ஒருவராக செயலாற்றியவர். தோழர் எல்.ஜி. நூறாவது பிறந்த நாள் விழா டிசம்பர் 15 வியாழனன்று காலை 10 மணியளவில் திருச்சி ஸ்ரீரங்கம் கணபதி நகரில் உள்ள நிவேதம் ஹாலில் நடைபெறுகிறது.