கோவை, செப். 23- கோவையில் மூத்த பத்திரிகையாளர்கள் மீது உள்நோக்கத்தோடு சமூகவலைத்தளங் களில் அவதூறு பரப்பிய மருது என்கிற மருதாசலம் மீது நடவடிக்கை எடுப்பதாக கோவை காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உறுதியளித்துள்ளனர். கோவையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்த இரண்டு பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுடன் பணத்திற்காக சில பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து செயல்பட்டதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து செய்திகளும் வெளிவந்தன. இந்நிலையில் கோவை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில் சமூகவிரோதச் செயலுக்கு உடந்தையாக இருந்து மாதா மாதம் பணம் பெற்று வந்த பத்திரிகையாளர்களின் பெயர் பட்டியலை காவல்துறையினர் பொதுவெளியில் வெளியிட வேண்டும். அவர்களை மக்களிடம் அடை யாளம் காட்ட வேண்டும். இல்லை எனில் பத்திரி கையாளர்கள் அனைவரும் அப்படித்தான் என்ற புரிதலை ஏற்படுத்தக்கூடும். எனவே ஒரு சிலரின் ஒழுங்கீனச் செயல்பாட்டினால் கோவை பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட இந்த அவப்பெயரை போக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் மருது என்கிற மருதாசலம் என்பவர் சமூகவிரோதச் செயலுக்கு உடந்தை யாக இருந்தவர்களின் பட்டியலை வெளியிட கோரிய மூத்த பத்திரிகையாளர்கள் மீது உண்மைக்குப் புறம்பாக உள்நோக்கத்தோடு பல்வேறு அவதூறு கருத்துக்களை சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருந்தார். இவர் ஏற்கனவே பத்திரிகையாளர் போர்வையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர். பெண்கள் உடைமாற்றும் வீடியோவை எடுத்து மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். சமூகவிரோதச் செயல்களுக்கு எதிராக துணிச்சலாகச் செயல்படும் பத்திரிகையாளர் களை மிரட்டுவதற்கு இவரை சமூகவிரோதக் கும்பல் பயன்படுத்தி வருகின்றன. தற்போதும் பட்டியலை வெளியிடக் கோரும் பத்திரிகையாளர் களை மனரீதியாக உளைச்சலை ஏற்படுத்தி, பிரச்சனையை திசைதிருப்பி உண்மை குற்ற வாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக ஊடகக்குழுக்களிலும் அவதூறு கருத்துக் களை பகிர்ந்து வருகிறார். இதுகுறித்து திங்களன்று கோவை காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார்பாடி ஆகியோரிடம் கோவை பிரஸ்கிளப் நிர்வாகிகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் 50க்கு மேற்பட்டோர் சந்தித்து புகார் அளித்தனர். சமூகவிரோதி களுக்கு ஆதரவாக, நேர்மையான பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் செயல்படும் மருது என்கிற மருதாசலம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தப்பட்டது. ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் விபரங் களை விரிவாக கேட்டறிந்ததோடு, அதன் உண்மைத் தன்மையையும் உறுதிசெய்தனர். இதையடுத்து கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.