tamilnadu

img

பணி வரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்குக!

கோயம்புத்தூர், அக். 2 - சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் 5 ஆவது மாநில மாநாடு கோவையில் எழுச்சியோடு துவங்கியது. செங்கொடிப் பேரணிக்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்தபோதும், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் திரண்டு பேரணி நடத்தினர்.  இதைத்தொடர்ந்து கோவை ஹர்சா மஹாலில் மாநாடு துவங்கியது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 19 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும்  ஊழியர்களுக்கு சட்டப்படியான பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம்  வழங்க வேண்டும். சமூக விரோதிகளிடம் இருந்து ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு  வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெறுகிறது.  மாநாட்டின் முதல் நாள் நிகழ்வாக மசக்காளி பாளையத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 

மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர்  எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார்.  சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளரும், வரவேற்புக்குழு தலைவைருமான ஏ.ஜான் அந்தோணிராஜ் வரவேற்புரையாற்றினார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாநில துணை தலைவர் இ.பொன்முடி, டாஸ்மாக் சம்மேளன தலைவர் கே.பழனி வேலு, பொதுச்செயலாளர் கே.திருச் செல்வன், பொருளாளர் ஜி.சதீஷ், சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு  மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.  முடிவில் வரவேற்புக்குழு பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.  தொடர்ந்து திங்களன்று நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் மற்றும் எதிர்கால இயக்க நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. மாநாட்டில் இருநூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.