tamilnadu

img

‘செங்கொடி ஏந்திய குழந்தைகள்’

மயிலாடுதுறை, டிச.23-  மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்தும் ‘‘வீரவெண்மணி தியாகத்தை நினைவுகூர்ந்தும் டிசம்பர் 17-ஆம் தேதி முதல் 250 கிலோ மீட்டர் நடைபயணம் மக்களின் பெரும் வரவேற்புடன் நடந்து வருகிறது.  கிராமங்களில் ஏழை, எளிய மக்கள் அன்பை பொழிந்து வரவேற்று உபசரித்து வரும் நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் கடுங்குளிர், சாரல் மழை என எதையும்  பொருட்படுத்தாமல் 100-க்கணக்கான தோழர்கள் செங்கொடியை கம்பீரமாய் ஏந்தியவாறு நடைபயணத்தில் பங்கேற்று வரும் நிலையில், 3-ஆவது நாள் நடைபயணமாக குத்தாலம் ஒன்றியம், மேலமங்கைநல்லூர் கிராமப்பகுதிக்கு வந்தடைந்தனர்.  

அப்போது பள்ளிக்கூடம் சென்று திரும்பி வந்த பள்ளிக்குழந்தைகள் சிலர் செங்கொடியினை கண்டவுடன் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியடைந்து பயணக்குழுவில் இடம் பெற்றுள்ள செந்தொண்டரும், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் உரிமைகளுக்காக அன்றாடம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் இந்திய மாணவர் சங்கத்தின் மயிலாடு துறை மாவட்டச் செயலாளருமான அமுல் காஸ்ட்ரோவின் கைகளிலிருந்த செங்கொடியை பிடித்து உயர ஏந்தி, பறக்கவிட்டு பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  இதைக்கண்ட பயணக்குழுவில் இடம்பெற்றிருந்த மாணவர் சங்கத்தின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் பிரவீன் அந்த காட்சியை தனது செல்போனில் படமெடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த படம் தற்போது பலராலும் கவரப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.  செங்கொடி எல்லோரின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல; அதை ஏந்தினால் கம்பீரமும் அழகும் தன்னாலே கூடும்.  ஜான்சன்