tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

நினைவேந்தல்  கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார் கே.பாலகிருஷ்ணன் தகவல்

சென்னை, செப். 15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செப்டம்பர் 12 அன்று தில்லியில் கால மானார். அவரது இறுதி ஊர்வலம் செப்டம்பர் 14 சனிக்கிழமை நடந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன்,  ஆ.ராசா ஆகியோர் தில்லி சென்று சீத்தராம் யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 15 நாட்களாக அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை செப்டம்பர் 14 சென்னை வந்தடைந்தார்.  இந்நிலையில் அவர் ஞாயிறன்று (செப்.15)  சென்னை தி.நகரில் உள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த யெச்சூரி உருவப்படத்திற்கு மலர் தூவி யும், மாலை அணிவித்தும்  மரியாதை செலுத்தினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறி,  தனது இரங்கலை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, ஐ.பெரிய சாமி, எ.வ.வேலு மற்றும் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, நே.சிற்றரசு எம்.சி., சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச்  செயலாளர் ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகநயினார், வே.ராஜசேகரன், இரா.சிந்தன், சுதீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதலமைச்சர் பங்கேற்பு

இதன்பின் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: தோழர் சீத்தாராம் யெச்சூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே முதலமைச்சர் எங்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அவர் நலமடைந்து வருவார் என்று உறுதியாக எதிர்பார்த்தோம். ஆனால்  அவர் காலமானார் என்ற அதிர்ச்சி செய்திதான் வந்தது.  அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு செப்.14 அன்றுதான் முதலமைச்சர் தமிழகம் திரும்பினார். அதனால் தில்லியில் நடைபெற்ற இறுதி நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. எனவே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோரை தில்லிக்கு அனுப்பி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செய்தார். அதன்பின், ஞாயிறன்று (செப். 15) கட்சியின் மாநிலக்குழு அலு வலகத்தில் வைக்கப்பட்டிருந்த உரு வப்படத்திற்கு அமைச்சர்களுடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மிகத் துயரத்தோடு எங்களிடம் முத லமைச்சர் விசாரித்தார். கலைஞர் மீதும், என் மீதும் மிகுந்த மரியாதை கொண்டவர்; பழகுவதற்கு இனிமை யானவர்; சிரித்து மகிழ்ச்சியோடு பேசுவார்; இவ்வளவு சீக்கிரம் நோய் வந்து மரணம் அடைவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறி வருத்தத்தையும், இரங்கலையும் தெரி வித்தார். தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு சென்னையில் படத்திறப்பு மற்றும் புக ழஞ்சலி நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.  தாங்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர், நிகழ்வில் கலந்து கொள்ள இசைவு தெரிவித்தார்.  இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.