“தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு 6 மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கினார். மேலும் காரைக்குடி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வசதிகளைப் பெருக்குதில் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன்படி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ. 1,000 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், ரூ. 8,911 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள், ரூ. 6,778 கோடியில் மழைநீர் வடிகால் திட்டங்கள். ரூபாய் 1,200 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள், ரூ. 858 கோடியில் 7.4 லட்சம் எல்.இ.டி மின் விளக்குகள், ரூபாய் 771 கோடியில் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ரூ. 424 கோடியில் பூங்கா அபிவிருத்திப் பணிகள், ரூ. 198 கோடியில் 100 அறிவுசார் மையங்கள் நகராட்சி நிர்வாகத் துறை பணிகள் நகரமயமாக்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது” என்று தமிழ்நாடு அரசு புதனன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.