tamilnadu

மனிதநேயம் கொண்டிடு!

-கோவி.பால.முருகு

மூடப் பழக்கத்தை விட்டிடு! -அதை
முளையி லேயே  வெட்டிடு!
இல்லாத ஒன்றைத் தேடாதே!-அது
இருப்பதாய்ச் சொல்வதைக்  கேளாதே!

ஆவிகள்  என்பது பொய்யே!-பேய்
தாவிடும்  கதையும் பொய்யே!!
பில்லி சூனியம் பொய்யே!-மூடர்
சொல்லிடும் கற்பனைப் பொய்யே!

ஞானம் என்றால் அறிவு!-இது
ஞானிகள் பெற்ற  செறிவு!
ஊனம் இல்லா அறிவு!-அது
உணர்த்திடும்  பகுத்த அறிவு!

கண்மூடி எதையும் ஏற்காய்-அதைக்
கண்டு  ஆய்ந்து அறிவாய்!
மண்ணிலே ஒழியட்டும் புராணம்!-அதில்
உண்மை  இல்லாக்  காரணம்! 

கதைகள் பற்பலச்  சொல்லுவார்!-அதைக்
கலக   வேராய்க்  கொள்ளுவார்!
விதைப்பார் மதவெறி  மூண்டிட!-தீமை
விளைந்திடும்    நாடு கெட்டிட!  

கடவுளர் கதைகள் கற்பனை!-அது
காசு  பறித்திடும் விற்பனை!
மூடம்    நிறைந்த   ஆபாசம்! -அது
முற்றிலும்  பொய்தரும் மோசம்!

வேதம் ஆகமம் புராணம் !-நாட்டில்
வேண்டாம் என்றார் வள்ளலார்!
மதமும் சாதியும் வெறுத்திடு!-நீ
மனித நேயம் கொண்டிடு!