சிறுவன் கடத்தல் வழக்கில் தொடர்பு எம்எல்ஏ ஜெகன்மூர்த்தி மீது வழக்குப் பதிவு
திருவள்ளூர், ஜூன் 17- சிறுவன் கடத்தல் தொடர்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி மீது திருவாலங்காடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில், திருமணம் செய்துகொண்ட இளைஞரின் சகோதரரான 15 வயது சிறுவனை பெண் வீட்டார் கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையில் ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியது டன், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டார். இந்த கடத்தல் வழக்கில் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமுக்கு தொடர்பு இருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து, அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதி மன்ற உத்தரவுப்படி அவர் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுவன் கடத்தல் தொடர்பாக ஜெகன்மூர்த்தி மீது திருவாலங்காடு காவல்நிலையத்தில் ஆள் கடத்தல், மிரட்டல், அத்துமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் செவ்வாயன்று காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் டிஎஸ்பி தமிழரசி விசாரணை மேற்கொண்டார். முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.