கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் அமைச்சரிடம் மனு
சென்னை, ஏப்.29 - கறிக்கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து திங்கட்கிழமை (ஏப்.28) அன்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.பி. பெருமாள், மாநிலத் தலைவர் டி.ஏழுமலை, மாநிலப் பொருளாளர் ஆர்.செந்தில்குமார், மாநில நிர்வாகிகள் எம்.எம்.ராஜூ, சாமிநாதன், முருகன் மற்றும் நாகைமாலி எம்எல்ஏ ஆகியோர் கால்நடை மற்றும் மீனவர் நலன்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை சந்தித்து கறிக்கோழி விவசாயிகளின் கோரிக்கை மனுவை முகாம் அலுவலகத்தில் கொடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். கறிக்கோழி விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், முத்தரப்பு கூட்டம் நடத்துவதற்கான பணிகளை செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.