நலத்திட்டங்களின் நிதியை பட்ஜெட்டில் குறைக்கும் பாஜக - தபன்சென் சாடல்
கடுமையான வறுமைச் சூழ்நிலையை மக்கள் எதிர்கொள்கிறார்கள். மாநில அரசாங்கங்கள் பாதிக்கப்பட் ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்தால் அதை நிறுத்த வேண்டும் என ஒன்றிய அரசு கூறுகிறது. அவர்கள் தங்களுடைய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டம், அங்கன்வாடிகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை குறைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் கடுமையான பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை பயன்படுத்துகிறது.
மக்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகளை இலவசம் என ஏளனம் செய்கிறது. ஒன்றிய அரசு இதுபோன்ற நலத்திட்டங்களுக்கான நிதியை பட்ஜெட்டில் தொடர்ந்து குறைத்து வருகிறது. அதே நேரத்தில் கார்ப்பரேட் வரியில் 25 சதவிகிதம் குறைக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல் டீசல் விலையை 185 சதவிகிதம் உயர்த்தியுள்ளார்கள். இது மின்கட்டணம் உட்பட அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கிறது என கூறினார். பேட்டியின்போது சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன் ஆகியோர் உடனிருந்தனர்.
நாகர்கோவில், நவ.5- சிஐடியு மாநில மாநாட்டையொட்டி சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பேட்டியளித்தார். அதன் விபரம் வருமாறு நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் செஞ்சட்டை பேரணிஞாயிறன்று (நவ.6) நடைபெறுகிறது. நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இங்கு நடந்துவரும் பிரதிநிதிகள் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தில் ஒன்றிய அரசு நமது சமூகத்தில் அமைதியையும் பொருளாதாரத்தையும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. குறிப்பாக சிறு தொழிற்சாலைகள் அதிக அளவில் மூடப்படுகின்றன. நமது பண மதிப்பு வீழ்ந்துகொண்டே இருக்கிறது. அந்நிய செலாவணி வீழ்ச்சி அடைகிறது. இவையெல்லாம் மிக மோசமான அறிகுறி. இலங்கையில் இருந்த அறிகுறிகள் இப்போது இந்தியாவில் இருப்பது தெளிவாக தெரிகிறது. இது அபாயகரமானது என்று அரசை எச்சரிக்கிறோம். மத்திய அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளில் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
நவீன தொழிற்சாலைகளில் செயற்கை மூளை, ரோபோக்கள் இவற்றை பயன்படுத்துவது அதிகரித்த காரணத்தினால் இருக்கிற வேலையும் பறிபோகிறது. உண்மைகளை மறைக்க கடுமையாக பொய்சொல்கிறார்கள். ஏன் ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது என்று கேட்டால் ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்பு கூடி விட்டது என்று நிர்மலா சீதாராமன் கூறுவதுபோல ஏராளமானோர் கூறுகிறார்கள். மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை. கல்வியில், சுகாதாரத்தில் என எல்லாவற்றிலும் தலையிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் மக்கள் மத்தியில் சாதி, மதம் , மொழியைச் சொல்லி மடைமாற்றம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, அதையொட்டி இங்கு எழும் எதிர்ப்பு இந்த பிரச்சனைகள் தான் விவாதத்துக்கு வரவேண்டும் என பிஜேபி விரும்புகிறது. ஒன்றிய அரசு நமக்கு தரவேண்டிய பணத்தை தராமல் இருப்பது போன்றவை விவாதத்துக்கு வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ப பல்வேறு சதிகளை செய்கிறார்கள். கேரளத்திலும் இதைத்தான் செய்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்திருந்தார்கள். அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை. அரசாங்கத்தின் செயல் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். போக்குவரத்தில் கடந்த ஆட்சியிலிருந்து இதுவரை 85 மாதங்களாக பஞ்சப்படி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை கொடுப்போம் என்று சொன்னார்கள். அதை கொடுக்கவில்லை. பழைய ஓய்வூதியம் ஆட்சிக்கு வந்தால் கொடுப்போம் என்றார்கள். ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கொடுத்துவிட்டார்கள்.
பத்தாண்டுகளாக ஒப்பந்த முறையில் ஒரு தொழிலாளி அரசுத்துறையில் பணியாற்றி இருந்தால் நிரந்தரப்படுத்துவதாக சொன்னார்கள். செய்யவில்லை. அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை காலமுறை ஊதியத்துக்கு கொண்டுவருவோம் என்று சொன்னார்கள், செய்யவில்லை. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையே கேள்விக்குள்ளாகிறது. யமகாவில் போட்டி சங்கத்தை உருவாக்குகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளில் அரசாங்கம் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வரவேண்டும். தொழிலாளிகள் அவர்களது உரிமையை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அதைக் கெடுக்க முதலாளிகள் முற்பட்டால் அதில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. மின்சார கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். சொத்துமதிப்புகள் மீது அவர்கள் போட்டிருக்கும் வரி மிக வும் மோசமானது. சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறார்கள்.
இவையெல்லாம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது என்பதை மாநில அரசு புரிந்து கொள்ள வேணடும் என்றார். அதே நேரத்தில் நீட்,மொழி, மாநில உரிமை போன்றவற்றில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிரான மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார். கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், மின்சார சட்டம் 2003 இன் படி கட்டணத்தை உயர்த்தாவிட்டால் கடன் தரமாட்டேன் என்று ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது என்கிறார்கள். பல விஷயங்களில் அப்படி கட்டாயப்படுத்துவார்கள். அது மக்களை பாதிக்குமா இல்லையா என்பதிலிருந்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். கட்டண உயர்வு அவசியமற்றது, செய்திருக்கக் கூடாது. அரசாங்கம் இதற்கு வேறு வழிகளை தேட வேண்டுமே தவிர மக்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது. உயர்வு கடுமையாகவும் இருக்கிறது. சொத்து வரி 150 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. 4 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக இப்போது 27 ஆயிரம் கட்ட வேண்டும். ஆகவே இந்த பிரச்சனையில் அரசாங்கம் சற்று கனிவோடு பரிசீலிக்க வேண்டும். ஏழைமக்களை பாதிப்பிலிருந்து விடுவிக்கிற அளவுக்கு நிர்ணயிக்க வேண்டும் என பதிலளித்தார்.