tamilnadu

ஆணவக்கொலை தீர்ப்பின் எதிரொலி: முருகேசனின் தாயார் மீது தாக்குதல்

கடலூர், அக். 17- கண்ணகி - முருகேசன் ஆணவக்கொலை தீர்ப்பின் எதிரொலியாக முருகேசனின் தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடலூர் விருத்தாசலம் அருகேயுள்ள குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் 2003ஆம் ஆண்டு புதுக்கூரை பேட்டையைச் சேர்ந்த மருது பாண்டியின் தங்கை கண்ணகியை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். கண்ணகி திருமணம் செய்துகொண்ட தகவல் பெண் வீட்டாருக்கு தெரிந்ததால், அப்போதைய விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் கண்ணகியை முருகேசன் தங்க வைத்திருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்கள் 2003 ஜூலை 8ஆம் தேதி முருகேசனைப் பிடித்து வைத்தனர். மேலும் விழுப்புரம் மூங்கில்துறைப்பட்டில் கண்ணகி இருக்கும் இடத்தை அறிந்த அவரது உறவினர்கள், முருகேசன் பிடித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு கண்ணகியை அழைத்து வந்தனர்.

பின்னர் முருகேசன், கண்ணகி ஆகிய இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச்சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷம் செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்தனர். இது சம்பந்தமான வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் செப்டம்பர் 24ஆம் தேதி, கடலூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் குப்பநத்தம் கிராமத்தில் வசித்து வந்த முருகேசனின் தாய் சின்னப்பிள்ளை கடந்த வியாழக்கிழமை மாலை தன் வீட்டின் வாசலில் இருந்தபோது சில நபர்களால் தாக்கப்பட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.இந்த தகவல் தாமதமாக தெரியவந்துள்ளது. முருகேசன் தாயார் சின்னப்புள்ளை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விருத்தாசலம் காவல் துறையினர் அவரிடம் வாக்குமூலம் பெற்று, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர்.

அந்த வாக்குமூலத்தில், 'சின்னப்பிள்ளையை புதுக்கூரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, வரதராசு, பாக்கியராஜ், சதீஷ்குமார், வெங்கடேசன், ராஜிவ் காந்தி, வினோத்குமார் ஆகியோர் தன்னை சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டியும், கம்பால் அடித்தும் எட்டி உதைத்தும் தாக்கியதாக' தெரிவித்துள்ளார். அதனடிப்படையில்  7 பேர் மீது ஆறு பிரிவுகளில்   வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை இதில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், கண்ணகி, முருகேசன் வழக்கை நடத்தி வந்த  வழக்கறிஞர் ரத்தினம், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவிடம், சின்னப்பிள்ளையைத் தாக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என மனு அளித்துள்ளார்.

;