tamilnadu

img

தாராபுரம் அம்பேத்கர் பயிற்சி மையத்தில் படித்த மூவர் அரசு பணிக்கு தேர்வு

திருப்பூர், ஜன.31 - திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையத்தில் படித்து வந்த மூன்று பேர் அரசு பணிக்கு தேர்வாகியுள்ளனர். தாராபுரம் அருகே காரத்தொழுவை சேர்ந்த பொ.ராம்ராஜ் தேர்வில் வெற்றி பெற்று வணிகவரித் துறையில் பணிக்கு தேர்வாகி இருக்கிறார்.  தாராபுரம் நகரத்தைச் சேர்ந்த இரா.சிபிசக்கரவர்த்தி ஆதிதிராவிடர் நலத்துறை பணி உத்தரவு பெற்றிருக் கிறார். அத்துடன் தாராபுரம் பொள்ளாச்சி சாலை சத்திரம்வேலூரை சேர்ந்த டி. ரம்யா வீட்டுவசதி வாரியத்தில் இளநிலை உதவியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இவர்கள் வெள்ளிக்கிழமையன்று இலவச பயிற்சி மையம் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்து கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் என். கனக ராஜிடம் வாழ்த்துப்பெற்றனர்.  இது குறித்து கனகராஜ் கூறுகையில், இங்கு நடத்தப்பட்டு வரும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இலவச பயிற்சி மையம் மிகச்சிறந்த முறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்டோர் இங்கு படித்து அரசு பணியில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர். தாராபுரம் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு பொதுமக்கள் பாராட்டுகின்றனர். பயிற்சி மையத்தின் பணி சிறப்பாக தொடரும் என்று தெரிவித்தார்.