tamilnadu

img

பெருவிழா விளக்கம் போல்...

“கங்குல் இருளிற் கவின்மணிபோல், புன்னகைபோல் எங்கள் குடிலில் எழிற்கோலம் தீட்டுகின்ற சின்னஞ் சிறுவிளக்கைச் சித்திரத்தைக் கண்டிரோ?”
எனத் தொடங்கும் கவிஞர் தமிழ் ஒளியின் அற்புதக் கவிதையை வாசித்தது உண்டோ? வாசிக்காதவர் தேடி வாசிப்பீர்!
 

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பறந்து திரியும் மின்மினிப் பூச்சியைப் பற்றிய கவிதை இது. கவிஞர் தமிழ் ஒளி கார்த்திகை மாதம் தமிழர் கொண்டாடும் திருக்கார்த்திகை விழாவையும் மின்மினிப் பூச்சியையும் இணைத்து பாடி இருப்பார். அநேகமாக மின்மினிப் பூச்சியைப் பாடிய முதல் கவிஞன் தமிழ் ஒளியாகத்தான் இருக்கும். திருக்கார்த்திகை விழாதான் தீபங்களால் அலங்கரித்து பண்டை நாள் முதல் தமிழர் கொண் டாடிய தீபத் திருவிழா! தீபாவளி பண்டிகையோ ஆரியரால் கொண்டாடப் பட்டு, பெரும் பண்டிகை போல் தோற்றம் வலிந்து கொடுக்கப்பட்டதே. ஆயினும் திருக்கார்த்திகையைத் தவிர்க்க முடி யாமல் அதற்கொரு புராணப் புளுகை சேர்த்தது தான் ஆரியர் திருகுதாளம். விழாவும் கொண்டாட்டமும் ஆதிகாலந் தொட்டும் மனித இயல்பு. எந்நாளும் எப்போதும் இறுக்கமாகவும் புலம்பிக் கொண்டும் இருக்க முடியுமா? அவ்வப்போது ஆடலும் பாடலும் விருந்தும் கேளிக்கையும் தேவை. விழாக்களும் கொண்டாட்டங்களும் அதன் ஒரு பகுதியே. ஆதிகுடிகள் அறுவடை, பருவமாறுதல் இப்படி பலவற்றை கொண்டாடித் தீர்த்தனர்.அவற்றை ஹைஜாக் செய்து மதமுலாம் பூசிக் கொண்டன மதங்கள். தீபாவளி, கிருஸ்துமஸ் எல்லாம் இதுவே. பொங்கல் மட்டுமே புராணப் புளுகற்ற ஒரே பண்டிகை.

பழந்தமிழர் கார்த்திகை, திருவோணம், பொங்கல், இளவேனில் விழா, தை நீராட்டு, இந்திர விழா, புனாலாட்டுவிழா, நீர்விழா. ஆடிப்பெருக்கு, பூந்தொடைவிழா, உள்ளிவிழா, பங்குனிவிழா, கோடியர் விழா, வெறியாட்டு விழா என தமிழர் கொண்டாடிய பல்வேறு விழாக்களை முனைவர் சி.சேதுராமன் பட்டியலிடுகிறார். அதில் தீபாவளி, விநாயக சதுர்த்தி, ஆயுத பூஜை, சிவராத்திரி, ஆவணி அவிட்டம் எல்லாம் இடம் பெறவில்லை என்பது கூடுதல் செய்தி. தமிழரின் பண்டிகைகள் பலவற்றிலும் கூட காலப்போக்கில் புராணப் புளுகு சேர்க்கப்பட்டன. அது எப்படி? யாரால்? எப்போது?. ஆய்ந்தறிந்த அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் கூடி முடிவு செய்வார்களாக! தமிழர் விழாக்களை அலசி ஆய்ந்து கொள்ள வேண்டியனவற்றை காலத்துக்கு ஒப்ப செப்பம் செய்து கொள்ள வேண்டியதும்; தள்ள வேண்டி யதை தள்ள வேண்டியதும் நம் கடன். சில விழாக் கள் குறித்த பழந்தமிழ் இலக்கிய சான்றுகளைப் பார்ப்போம். தலைவன் தலைவியை பிரிந்து பொருளீட்டச் சென்றுவிட்டான். தோழி ஆறுதல் சொல்கிறார்.” திருக்கார்த்திகைத் திருவிழாவைக் கொண்டாட தலைவன் என்னோடு இருப்பான்” என தலைவி நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். அக நானூறில் நக்கீரர் பாடியதாக இப்பாடல் உள்ளது. ‘அறு மீன்’ என்றும்  ‘அறம் செய் திங்கள்’ என்றும் திருக்கார்த்திகையைக் கொண்டாடியதாக நற்றிணை சொல்லும். தேவாரத்திலும் இவ்விழா பற்றிய செய்தி உண்டு. அகநானூற்று காட்சியைப் பார்ப்போம். “தோழி! பெரு மழையால் உழவு தொழில் முடங்கியது; அதனாலே மற்றையத் தொழில்க ளும் முடங்கின. அந்த பெரு மழையானது இப்போது ஓய்ந்துவிட்டது. மழை முகில் இல்லா மல் வானம் பளிச்சிடுகிறது. சிறுமுயலாகிய மறுவைப் போல் உரோகிணி நட்சத்திரத்தை தன் மார்பகத்தே விளங்கச் செய்கிறான் சந்திரன். இப்படி உரோகிணி சந்திரனுடன் சேரும் இருள கன்ற நடுஇரவில், அஃதாவது திருக்கார்த்திகைத் திருவிழா நாளின் இரவு, வீதி முழுக்க அகல் விளக்குகளால் அலங்கரித்து, பூக்களை மாலை களாகத் தொங்கவிட்டு தொங்கவிட்டு ஊரே கொண்டாடுகிறது. பழைமையைத் தனக்குப் பெருமையாகக் கொண்ட மூதூரில் பலருடன் கலந்து கொண்டாடும் இவ்விழாவில்,நம்மோடு கூடிக் கொண்டாடும் வண்ணம் அவர் வருவார்.”

இன்னொரு காட்சி .அதுவும் அகநானூற்றில் தான். பாலை பாடிய பெருங்கடுங்கோ வரைந்தது. வேறுபட்ட பிரிந்த தலைவன் குறித்து தலைவி சொல்லுகிற பாங்கில் இறுதியில் உரைப்பாள், “…மழை பெய்யாததால் அருவி நீரின்றி காய்ந்துவிட்டது. அந்த மலை முகடுகளில் இலவ மரங்களில் இலை எல்லாம் உதிர்ந்து விட்டன.பூக்கள் மட்டும் இப்போது கண் சிமிடுகின்றன. அவை திருக்கார்த்திகை விழா அன்று விளக்கு களை ஏற்றி வைத்தது போல அழகாய் ஒளிர் கின்றன. இந்த எழில் மிகுந்த மலையைக் கடந்து அவர் சென்றுவிட்டார்.”

‘‘மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர’’ 
(அகநானூறு : 141 .நக்கீரர்.) 
 “…. ….. ….. ….. …… …………..
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
பெரு விழா விளக்கம் போல, பல உடன்
இலை இல மலர்ந்த இலவமொடு
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.”         
[பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பாலைபாடிய பெருங்கடுங்கோ] 
சு.பொ.அகத்தியலிங்கம்