அடுக்குமாடிக் குடியிருப்புகள்: காணொலி மூலம் முதல்வர் திறப்பு
புதுக்கோட்டை, மே 20- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், புதுக்கோட்டை கவிநாடு மேற்கு மற்றும் போஸ்நகர் பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, கவிநாடு மேற்கு, புதிய அடுக்குமாடி குடி யிருப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- கவிநாடு மேற்கு திட்டப் பகுதியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தரை மற்றும் மூன்று தளங்களுடன் 432 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் போஸ்நகர் திட்டப் பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன்; 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளும் என ரூ.53.44 கோடி செலவில் 576 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன், துணை மேயர் எம்.லியாகத் அலி, நிர்வாகப் பொறியாளர் சி.யோகேஸ்வரன், வட்டாட்சியர் மு. செந்தில்நாயகி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.