tamilnadu

img

கீழகொற்கை அரசுப் பள்ளி வகுப்பறை, பொருட்களை தீ வைத்து நாசம் செய்த சமூக விரோதிகள்

கீழகொற்கை அரசுப் பள்ளி வகுப்பறை, பொருட்களை தீ வைத்து நாசம் செய்த சமூக விரோதிகள்

கும்பகோணம், ஏப்.27-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, கீழக் கொற்கை அரசு உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் அறை மற்றும் வகுப்பறையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஆவணங்கள் தீக்கிரையாகின. விடுமுறை என்பதால் உயிர் சேதம் ஏதும் இல்லை. கும்பகோணம் அருகே, கீழகொற்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளி 1937 இல் கட்டப்பட்ட பழமையான வகுப்பறைகள் கொண்டதாகும். இது வாய்க்கால் ஓரமாக இருப்பதால் மழைக்காலங்களில் பல்வேறு விஷ ஜந்துக்கள் நடமாடும் இடமாகவும் இருக்கிறது. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் எந்த நேரமும் அச்சத்துடன் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனை அடுத்து, கூடுதல் வகுப்பறை தேவைப்படும் என கோரிக்கை விடுத்ததால் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசு புறம்போக்கு இடத்தில் ஒரு பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இதனால், மாணவர்கள் இந்த வகுப்பறையில் இருந்து அந்த வகுப்பறைக்குச் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், பழமையான இந்தப் பள்ளி கட்டடம் மது பிரியர்கள் நடமாடும் இடமாகவும், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மது அருந்துவதும் மது அருந்திவிட்டு அங்கேயே பாட்டில்களை போடுவது சமூக விரோதச் செயல்கள் நடப்பது  வாடிக்கையாக இருந்து வருகிறது.  தற்போது, பள்ளி கோடை விடுமுறை என்பதால், முழு நேரமும் பள்ளி வளாகத்தில் சமூக விரோதச் செயல்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென்று பள்ளி வகுப்பறை தலைமை ஆசிரியர் அறை தீப்பற்றி எரிந்தது. உடனே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்தனர். ஆனாலும், பள்ளியில் உள்ள பர்னிச்சர், மாணவர்கள் அமரும் டெஸ்க் பஞ்ச் மற்றும் ஆய்வக உபகரணங்கள், அங்குள்ள ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது. சமூக விரோதிகள் பள்ளி கட்டடத்தின் சுற்றுப்புறத்தில் மது அருந்தி , புகைப் பிடிப்பதால் இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.  இப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட புதிய இடம், அரசு புறம்போக்கில் உள்ளதால் ஒருங்கிணைந்த வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டடமாக கட்டுவதில் சிரமம் உள்ளது. ஆகவே அந்த இடத்தை சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் பார்வையிட்டு பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலரின் நேரடி கட்டுப்பாட்டிற்கு அடிமனையை பெயர் மாற்றம் செய்து தர வேண்டும். அப்படி செய்யப்படாமல் உள்ளதால் புதிய கட்டடங்கள் கட்ட இயலாமல் போவதாகவும் பள்ளிக்கு கூடுதலாக நான்கு வகுப்பறைகள் தேவைப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.