சென்னை,டிச.31- மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக வணிகவரி-பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய விழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு “ஜல்லிக்கட்டு” போட்டிகள் நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கள் மிகவும் பிரபலமானவை. ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்தில், 15 ஆம் தேதி பாலமேட்டில், 16 ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், வணிகவரி -பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.