tamilnadu

img

அதிமுக புறக்கணிப்பு : பாஜகவுடன் செல்லும் எண்ணமா? க.பொன்முடி

சென்னை, நவ.12- கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளாமல் இருப்பது பாஜகவுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணமா?  என்று அமைச்சர் க.பொன்முடி கேள்வி எழுப்பினார்.  பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு தீர்ப்பு வழங்கப்பட்ட விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் க.பொன்முடி,“அரசு கூட்டிய  கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, தவாக, விசிக, மமக, கொமதேக உள்ளிட்ட 10 கட்சிகள்  கலந்துகொண்டன.  பங்கேற்ற தலைவர்கள்  பொருளாதார அடிப்படை  என்ற பெயரில்  சமூக நீதிக்கு எதிரான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஆதரித்து உச்ச நீதிமன்றம் அளித் திருக்கின்ற தீர்ப்புக்கு எதிராக நீதி மன்றத்தை மீண்டும் அணுக வேண்டும் என்ற அடிப்படையிலான கருத்து களைத் தெரிவித்தனர்”என்றார். சமூக நீதி கொள்கையில் எம்ஜிஆர்,  ஜெயலலிதாவுக்கும் ஒருமித்த கருத்து  இருந்தது.

சமூக நீதிக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்ததில் ஜெயல லிதாவுக்கும் பங்குண்டு. திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே சமூக  நீதிக் கொள்கையை எப்போதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்சிகளாகத்தான் உள்ளன. 10 விழுக்காடு விவகாரத்தில்  நாடாளுமன்றத்திலும், மாநிலங்கள வையிலும் எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்த கட்சியான அதிமுக இந்தக்  கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்குக் காரணம்  பாஜகவுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணமா? என்று எங்களுக்குத் தெரியவில்லை.  அதிமுக கலந்து கொள்ளாதது  வருத்தம் அளித்தாலும்கூட, திமுகவின் நிலைப்பாட்டை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்வார்கள். அப்படிச் செய்யத் தவறினால், பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிமுகவைத் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார் பொன்முடி.

நாகை மாலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பேசுகையில் “10 விழுக்காடு இட  ஒதுக்கீடு  விவகாரத்தில் எங்களது கட்சியின் நிலைப்பாட்டைக் கூட்டத்தில் விரிவாகப் பதிவு செய்தோம். முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் அதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 10  விழுக்காட்டைத் தமிழ்நாட்டில் எப்படி  அமல்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கக் கேரளாவின் அனுப வத்தைப் பின்பற்றி ஆணையம் அமைக்க வேண்டும்” என்று வலியுறுத் தியதாகவும் அவர் தெரிவித்தார்.

காங்.முடிவு என்ன?

முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது  “ 10 விழுக்காடு இட  ஒதுக்கீடு என்பது எஸ்.சி., எஸ்டி., ஓபிசி பிரிவினரை உள்ளடக்கியதாக  இருக்க வேண்டும் என்பதைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறி யுள்ளதாக அக் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வ பெருந்தகை கூறினார்.  முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று மூன்றில் இரண்டு நீதிபதிகள்  கூறியுள்ளனர். எனவே, அந்த தீர்ப்பை ஆய்வு செய்வோம் என அகில இந்தியத் தலைமை கூறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சீராய்வு மனு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களிடம் பேசுகையில் “ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த கட்சி என்ற முறையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்வோம். இந்த மனுவை விரிவான அமர்வு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துவோம். இந்த விவகாரம் தேசிய அளவிலான பிரச்சனை என்பதால் பாஜக அல்லாத மாநில முதல்வர்களையும் தமிழ்நாடு முதல்வர் ஒருங்கிணைக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.