சென்னை,மார்ச் 11- தமிழ்நாடு சிறைகளில் 14 முதல் 28 ஆண்டுகள் வரை சிறைவாசத்தை முழு தண்டனை காலமாகக் கருதி மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யும் கோப்புகள் விரைவில் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கொட்டிவாக்கம் (ஒய்எம்சிஏ) மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பவளவிழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றியதன் சுருக்கம் வருமாறு:- முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததும் மிலாதுநபிக்கு அரசு விடு முறை அறிவித்தது திமுக. உருது பேசும் முஸ்லீம்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கலைஞர். சிறுபான்மையினர் நல ஆணையத்தை தொடங்கி வைத்த வரும் கலைஞர்தான். பிறப்பு, இறப்பு, திருமணங்களை பதிவு செய்யும் அதிகாரத்தை கேரள மாநிலத்தில் உள்ளதுபோல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்று இந்த மாநாட்டில் வைத்திருக்கும் கோரிக்கையை நிறைவேற்றித்தரப்படும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் முக்கியமான கோரிக் கையான, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் முஸ்லீம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து ஆராய்வதற்காக அமைக் கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. விரை வில் அவை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதயத்தால் ஒன்றுபடுகிறோம்
“சமூகநீதி-சமத்துவம் மற்றும் உண்மையான அரசியல் ஜனநாய கத்தை மேம்படுத்துவோம், இந்தியா வின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலை நிறுத்துவோம். சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், இதயங்களின் இணைப்பை வலுப்படுத்தவும் பாடு படுவோம். இந்நாட்டு மக்களின் அமைதி, சமாதானம், செழிப்புக்காக உழைப்போம்” என்று இந்த மாநாட்டில் வாசிக்கப்பட்ட உறுதியை நான் எழுதியதாகவே இருந்தது. நாம் இயக்கத்தால் வேறுபட்டு இருந்தா லும் இதயத்தால் ஒன்றுபட்டவர்கள் என்பதை உணர்த்துகிறது.
நாட்டை காப்பாற்றும் கருத்தியல்
இதே சமூக விழுமியங்கள் நாடு முழுமைக்கும் பரவவேண்டும். இந்தியாவை காப்பாற்றும் ஆற்றல், சமூகநீதி-சகோதரத்துவம்- சமதர்மம் ஆகிய மூன்று கருத்தியல் களுக்குத்தான் உண்டு. எல்லை களைக் காப்பாற்றுவது முப்படைகள் என்றால், எண்ணங்களால் நாட்டைக் காப்பாற்றுவது இந்த மூன்று கருத்தியல்கள்தான். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உணவு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு எனறு ஒற்றைத்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்ற நினைப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள். சகோதரத்துவத்துக்கு எதிரானவர்கள், சமதர்மத்தை ஏற்காமல் இருக்கக்கூடியவர்கள்.
உரிமையில்லாத ஆளுநரா?
சூதாட்டத்துக்கு எதிரான சட்டத் திற்கு கூட ஒப்புதல் தர மறுக்கிறது. நான்கு மாதங்கள் கழித்து, மாநில அரசுக்கு இது போன்ற சட்டத்தை நிறைவேற்ற உரிமை இல்லை என சொல்கிறார். இந்த சாதாரண சட்டத்தைக்கூட நிறைவேற்றுவதற்கு உரிமை இல்லா மாநிலத்துக்குதான் அவர் ஆளுநராக இருக்கிறாரா? நீட் விலக்குக் கேட்டு அவசர சட்டம் போட்டு அனுப்பினால் அதை நீண்ட நாள் கிடப்பில் போட்டுத்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பு கிறார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் சட்டம் முடக்கப்பட்டு கிடக்கிறது. இதுதான் ஆளுநர்கள் செயல்படக்கூடிய லட்சணமா?
வெறுப்பு பிரச்சாரம்!
உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டம் உடனடி யாக நிறைவேறும், சிறுபான்மை யினர்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டம் வேகமாக நிறைவேறும், நீட் தேர்வைக் கொண்டு வந்து ஏழை-எளிய மக்களின் மருத்துவக் கனவை தகர்ப்பார்கள், இந்தியைத் திணிப்பார்கள். மாற்று மதத்தவர் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வார்கள். ஆனால், சூதாட்டத் தாலும், நுழைவுத் தேர்வாலும் உயிர்கள் பலியாவதைத் தடுக்க சட்டம் இயற்றினால் அதை நிறை வேற்றாமல் தடுக்கிறார்கள். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தலாக 2024-ல் நடைபெறும் மக்களவைத் தேர்தல் அமையப்போகிறது. அந்த வெற்றிக்கு அடிப்படை ஒற்றுமை, அதைத்தான் தொடர்ந்து நான் மட்டுமல்ல எல்லோ ரும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.