இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் முன் னெப்போதும், தலைவர்கள் யாரும் செய் திராத பணி இது.கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் வாழ்வும் பணியும் பற்றி யாரும் எழுதியதாக என் வாசிப்பில் நான் கண்டதில்லை. தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற பெண் தோழர்கள் பற்றி ஒரு நூல் வந்தது மட்டும் நினைவில் இருக்கிறது. கட்சியின் உயிர்த்துடிப்பாகவும் ரத்த நாளங்களாகவும் இருப்பவர்கள் அடிமட்டத்தில் மக்களோடு நின்று பணியாற்றும் கட்சி உறுப்பினர் களே. அவர்களின் தியாகத்தின் மீது நடந்துதான் கட்சி முன்னேறுகிறது. பாடல் பெறாத அந்தக் கதா நாயகர்களைப்பற்றி அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தானே முன்னின்று தோழர்களிடம் பேசித் தகவல் திரட்டி இந்த நூலை எழுதியிருப்பது முன்னுதாரணம் இல்லாத பணி. இது ‘தீக்கதிர்’ வண்ணக்கதிரில் இதழில் வாரம்தோறும் தொடராக வந்து கொண்டிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பாகும்.இவ்வகையில் இது மூன்றாவது தொகுப்பாகும்.முதல் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கிய நூற்றாண்டு கண்ட நம் முன்னோடி தோழர் என்.சங்கரய்யா எழுதியிருந்த ஒரு பத்தியை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்:
‘‘தோழர் ஸ்டாலின் கட்சி ஊழியர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் கூறியதாவது: கட்சி ஒரு குறிக்கோளை நிர்ணயித்த பின்னர், எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்கள் கட்சியின் ஊழியர்களே என்பதாகும். எனவே ஒரு திறமைமிக்க தோட்டக்காரர் எவ்வாறு தன் தோட்டத்திலுள்ள ஒவ்வொரு செடியை யும் பார்த்து அதற்குள்ள குறைபாடுகளைப் போக்கி அதற்கு ஊட்டமளித்து வளரச் செய்வாரோ, அதைப் போல் கட்சி ஊழியர்களைப் பக்குவப்படுத்தி சிறந்த ஊழியர்களாக வளர்ப்பது கட்சியின் கடமையாகும்’’. உண்மையில் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் இந்தக் கட்சிக் கடமையைத்தான் இத்தொடரின்வழி ஆற்றி வருகிறார் எனலாம். சிறந்த ஊழியர்களின் வாழ்க்கையை எழுதி இளம் தலைமுறைக் கம்யூ னிஸ்ட்களுக்கு வாசிக்கத் தருவதன் மூலம் தங்களோடு ஒருவராகப் பயணிக்கும் மூத்த தோழர் ஒருவர் இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கும்போது நாமும் அப்படி வாழ வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படும்.இதுவும் ஒரு முக்கியமான கட்சிக் கல்விதான். சீனத்தின் தோழர் லியூ ஷோஷி எழுதிய “சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?’’ என்கிற நூலுக்கு நடைமுறை மற்றும் செயல்முறை விளக்கம்போல இந்த நூல் அமைந்திருப்பதாக நான் உணர்கிறேன்.எத்தனை எத்தனை சிறந்த கம்யூனிஸ்ட்களை நாம் இந்நூலில் சந்திக்கிறோம்.
தியாகத்தில் புடம்போட்டு அனுபவத்தால் கனிந்த இந்தத் தோழர்களின் வாழ்க்கை எத்தனை விதமான படிப்பினைகளை நமக்குத் தருகின்றன!! அநேகமாக இந்நூலில் பேசப்படும் 60 க்கு மேற்பட்ட தோழர்கள் எல்லோருமே 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். சிலர் 90 வயதுக்கு மேல் முதிர்ந்தவர்கள். அந்த வயதுக்காரர்களாக இருந்தாலும் கட்சியைப்பற்றிப் பேசும்போது அவர்களின் உள்ளமும் முகமும் மலர்ந்து பிரகாசிப்பதைப் பார்க்கிறோம்.நாம் முழக்கமிடும்போது ‘‘உதிரச்செங்கொடி உயரட்டும்’’ என்று சொல்வோமே; அந்த உதிரச்செங்கொடியின் உண்மையான புதல்வர்கள் இவர்கள்தாம். ‘‘நண்பர்களோடும், தொழிலாளர்களோடும், பொதுமக்களோடும் அரசியல் பேசிய நான், என் மனைவி மக்களோடு பேச நேரம் இல்லாமல் போய்விட்டதே என்று இன்று வருத்தப்படுகிறேன். பள்ளி,கல்வி, உத்தியோகம் என்ற அளவில் எந்திரமய மாக என் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். ஆகவே ஒருவர்கூட பொது வீதிக்கு வரவில்லை. அரசியலுக்கு வரவில்லை, நம் இயக்கத்துக்கு வரவில்லை. இது வாழ்வின் மிகப்பெரிய தோல்வியாகவும் ஏமாற்றமாக வும் கருதுகிறேன்’’ என்று 82 வயதாகும் தோழர் நெல்லை பாலு மனம் கரைந்து குற்ற உணர்வுகொண்டு பேசுவதை தோழர் ஜி.ஆர். பதிவு செய்கிறார். இது ஒரு முக்கிய மான பாடம் எதிர்காலத் தலை முறைக்கு.
குடும்பமே கட்சிக் குடும்பமாக வாழ்வதைத்தான் அநேகமாக எல்லா அத்தியாயங்களும் பேசு கின்றன. தோழர் ஜி.ஆர். மொத்த நூலுமே ஆண் கம்யூனிஸ்ட் களின் நூலாக ஆகிவிடாமல் கவன மாக ஒவ்வொரு அத்தியா யத்திலும் தோழரின் இணையர் எப்படிக் கட்சி ஈடுபாட்டுடன் இருந்தார் என்பதையும் சேர்த்தே பதிவு செய்துள்ளது இந்நூலின் சிறப்பாகும். தன்னுடைய கணவர் கு.ராமய்யா மறைந்த பிறகும் மதுரைத் தோழர் ஜெயலட்சுமி கட்சிப்பிடிப்பு டன் தன் குடும்பத்தையே கட்சிக் குடும்பமாக நடத்தி வருவதை வாசிக்கையில் நம் கண்கள் கசிகின்றன. அதிலும் அவருடைய மகனை கட்சியின் முழுநேர ஊழியராக ஆக்கலாமா என்று கேட்டபோது ‘‘கட்சி யின் முடிவுதான் என் முடிவு’’ என்று தயங்காமல் அவர் கூறும் இடம் சிலிர்க்க வைக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தோழர் சோமு ஒரு சிற்றுண்டிக்கடை நடத்தி அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்துகொண்டு கட்சிப்பணி ஆற்றுகிறார். தொடர்ந்து போராட்டங்கள், கைது-சிறைவாசம் என்று அலையும் வாழ்க்கை அந்தக் கடையை நடத்த விடவில்லை, மூடப்படுகிறது. அவரது இணையர் தோழர் ரேவதி ‘‘தனது கணவரின் கட்சிப்பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக, அதற்கு எவ்வித இடையூறும் வந்துவிடக்கூடாது என்ற அக்கறையுடன் வீட்டிலேயே இடியாப்பம் செய்து கடைகளுக்கும் வீடுகளுக்கும் விநியோகம் செய்து ,அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி சோமுவின் கட்சிப்பணிகளுக்கு உறுதுணை யாக இருந்தார்’’ என்கிற வரிகளை வாசிக்கும் போது நெகிழ்ந்து போகிறோம். லெவி கொடுக்க மனம் தயங்கும் நடுத்தர வர்க்க மனோபாவம் குறித்த வெட்க உணர்வும் வருகிறது.
‘‘1935 ஆம் ஆண்டில் பிறந்த பெரு மாள், வத்தலக் குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர்.கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்த பெற்றோரால் இவரைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க இயலவில்லை.கையெழுத்து மட்டும் போடக் கற்றுக்கொண்ட பெருமாள் தினமும் யாரேனும் ஒரு தோழரிடம் ‘தீக்கதிர்’ நாளேட்டைக் கொடுத்துப் படிக்கச்சொல்லி இயக்கச் செய்திகளையும் கருத்துகளையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்’’ என்று தோழர் ஜி.ஆர். எழுதிச்செல்கிறார். தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தின்போது மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டிய சேதி இது. கல்வி அறிவே இல்லாவிடிலும் ஆர்வமும் துடிப்பும் இருந்தால் தீக்கதிரை வாங்கி ‘வாசிக்க’ முடியும் என்பதற்கு தோழர் பெருமாள் மிகச்சிறந்த முன்னுதாரணம். படிப்பு மறுக்கப்பட்டு இளவயதிலேயே வேலைக்குச் சென்ற குழந்தை உழைப்பாளிகளே இந்நூலில் மீண்டும் மீண்டும் அறிமுகம் ஆகிறார்கள். பலப்பல அன்றாடக் கூலி வேலைகளைச் செய்துகொண்டே இவர்கள் கட்சிப்பணியும் ஆற்றுகிறார்கள். ‘‘வறுமை எனக்கு அண்ணன் தம்பி முறை..பசியும் பட்டினியும் மாமன் மச்சான் முறை...’’ என்று பாவலர் ஓம் முத்துமாரி ஒரு பாடல் பாடுவார். அப்பாடலின் நாயகர்களாக இந்தத் தோழர்கள் அசலாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தோழர்களின் கட்சிதான் மார்க்சிஸ்ட் கட்சி என்பதைவிடப் பெருமை நம் கட்சிக்கு வேறென்ன வேண்டும்.
என்னுடைய கட்சி வாழ்வில் நான் நேரடியாக அறிந்த சில தோழர்களைப் பற்றிய நான் அறியாத வரலாற்றுக் குறிப்புகள் எனக்கு அந்தத் தோழர்கள்பால் இன்னும் கூடுதலான மதிப்பையும் நெருக்கத்தையும் உண்டாக்கிவிட்டன. நான் வாழும் சிவகாசி நகரில் இயக்கத்தின் மூலவராக இருந்தவர் மறைந்த தோழர் ‘தொண்டர் துரைசாமி’ ஆவார். வாழும் தொண்டர் துரைசாமியாக இன்றைக்கு எம்மோடு இயங்கிக்கொண்டிருப்பவர் தோழர் ஜே.லாசர். 1978 இல் வெள்ளத்தில் சிக்கிய தீப்பெட்டித் தொழிலாளர் பேருந்தில் பயணித்த குழந்தைகள் மணலுக்குள் புதைந்தனர்.சேதி கேள்விப் பட்டுப் பதறி ஓடிய தோழர் லாசர், மண்ணுக்குள் புதைந்த குழந்தைகளின் சடலங்களைத் தேடித்தேடி வெளியே எடுத்துத் தன் தோள்களில் சுமந்து வந்தவர். அச்சுத்தொழிலாளியான அவர் மதுரை மாநகரில் தீக்கதிர் தினசரி இதழாக வெளியாகத் தொடங்கியபோது அதனுடைய முதல் பிரதியை அச்சுக் கோர்த்துக் கொடுத்த தொழிலாளியாகப் பணி யாற்றத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை இன்றைக் கும் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறார். கட்சித் தோழர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் தாம் பெருமையாகவும் பெருமிதங்களாகவும் நினைவு களில் படிந்திருக்கின்றன. அல்லது கட்சித்தலைவர்கள் தங்கள் வீட்டில் உணவருந்திய தருணங்கள், தலைவர்களோடு சிறையில் சேர்ந்திருக்க வாய்த்த நாட்கள் என சிறுவாடு போல அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் நினைவுகள் அற்புதமானவை. அர்த்தமுள்ளவை அவற்றையெல்லாம் தோழர் ஜி.ஆர்.அடையாளம் கண்டு வெளிக்கொணர்ந்திருப்பது இந்நூலின் மற்றுமொரு சிறப்பு.
காந்தியின் பேத்தி இலா காந்தி ஆப்பிரிக்காவில் கம்யூனிஸ்ட் இயக்க வீராங்கனை என்கிற தகவலே பல வாசகர்களுக்கும் சிலிர்க்க வைக்கும் புதிய செய்தியாகும். திட்டாணிமுட்டம் கிருஷ்ணனைப்போல 80 வயதுக்கு மேல் தங்கள் பகுதியில் அமர்ந்து இளமைக் காலத்தில் போராட்டக்களத்தில் ரவுடிகளால் பெற்ற வெட்டுக்காயத் தழும்புகளைத் தடவியபடி தங்கள் நினைவுகளில் அமிழ்ந்து கொண்டிருக்கும் தோழர்கள்தான் எத்தனை எத்தனை பேர்?. நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் சதா அலைபாய்ந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க ஊழியர்களுக்கு மத்தியில் இந்த நூலில் விரிகின்ற தோழர்களின் - அடிமட்டத் தோழர்களின் வரலாறும் அசைக்க முடியாத கட்சிப்பிடிப்பும் வியக்க வைக்கிறது. பின்பற்றத்தக்க வாழ்வாக மின்னுகிறது. ‘‘காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தாரகை போன்று ஜொலித்து நிற்கின்றீர்’’ என்கிற வரிகளுக்கு இலக்கணமான இத்தோழர்களுக்கு ஒரு ரெட் சல்யூட். இதை ஒரு விடாப்பிடியான பணியாகச் செய்து வரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு ஒரு செவ்வணக்கம். இயக்கத்தின் வேர்களான இத்தோழர்களுக்குச் சற்றே நீர் வார்க்கும் செயலாகவே இந்நூலைப் பார்க்க முடிகிறது. வாசிப்போம். இந்நூலைப் பரவலாக இளை ஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம்.
பொதுவுடமை இயக்கத்தில்
பூத்த மலர்கள்
களப்பணியில் கம்யூனிஸ்டுகள் பாகம் - 3
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.250/-