நவஜீவன்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் அக்டோபர் 14 முதல் 18 வரை புதுக்கோட்டை யில் நடத்திய 7-ஆவது உலகத் திரைப்பட விழாவுக்குத் திரைப்பட ஆர்வலர்கள் தந்த ஆதரவு வியப்பூட்டக் கூடியதாகவும் களிப்பூட்டக் கூடியதாகவும் இருந்தது. திரைப்பட விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே நன்கொடை அனுமதிச் சீட்டுகள் தீர்ந்து விட்டன. திரைப்பட ஆர்வலர்களின் எதிர்பார்ப்புக்கு மேலாகவே விழா ஏற்பாடும் திரைப்படங்களும் அமைந்திருந்தன என்பது இந்த விழாவின் தனிச்சிறப்பு. திரைப்பட ஆர்வலர்கள் விருந்தினர்களைப் போலக் கவனித்துக்கொள்ளப் பட்டார்கள்.அவர்களுக்குத் தங்குமிட வசதி செய்யப்பட்டது. காலை, மதியம் இருவேளையும் உணவு வழங்கப் பட்டது. உணவின் தரமும் சுவையும் அருமை. படங்கள் திரையிடப்பட்ட ‘‘வெஸ்ட் திரையரங்கம்’’ மாநகரத் திரை யரங்குகளுக்கு ஈடான தரத்துடன் இருந்தது.
ரசனை மேம்பட
திரைப்படப் பயிற்சி நிலையப் பேராசிரியர் சிவகுமார் திரைப்படங்களைத் தெரிவு செய்திருந்தார். உலகத் திரைப் பட விழாவின் தோக்கம் சமூகத்தின் மெய்மையான வாழ் வியலை கலையழகோடு சொல்லும் திரைப்படங்களை வெகுமக்களுக்குக் கொண்டு செல்வதாகும். நாடுகள், மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் வேறுபடலாம்; ஆனால், உலகம் முழுவதும் மனிதர்களின் உணர்வோட்டங்களும் வாழ்க்கைப் போராட்டங்களும் வேறுபட்டவை அல்ல என்பதையே பல்வேறு நாட்டுத் திரைப்படங்கள் உணர்த்துகின்றன. இவை மேம்பட்ட திரைப்பட ரசனையை மட்டுமின்றி உலக ளாவிய பார்வையைத் திரைப்பட ரசிகருக்குத் தரு கின்றன. கோவா, மும்பை போன்ற நகரங்களில் நடத்தப்பட்டு வந்த உலகத் திரைப்பட விழாக்கள் பின்னர் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் போன்ற நகரங்களிலும் மாநில அரசின் உதவியுடன் நடைபெறத் தொடங்கின. தமுஎகச தனது தனித்த பார்வையின் அடிப்படையில் தன் சொந்த முயற்சியின் பேரில் மாவட்ட அளவிலான உலகத் திரைப்பட விழாக்களை நடத்தி வருகிறது. இதற்கு தனிப்பட்ட புரவலர்களின் ஆதரவும் திரைப்பட ஆர்வலர் களின் ஆதரவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தற்போது ஓடிடி (OTT) மற்றும் வலைத்தளங்கள் பட உருவாக்கம் மற்றும் திரையிடலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன. இந்த ஊடகத் தொழில்நுட்பப் புரட்சி, திரையரங்கம் இன்றியமையாதது என்ற கருத்தாக் கத்தைப் புரட்டிப் போட்டுள்ளது. எனவே திரையாக்கக் கலைஞர்களும் ரசிகர்களும் இதற்கேற்பத் தகவமைத்துக் கொண்டுள்ளார்கள். திரையரங்கத்துக்கு வராத அல்லது திரையரங்கங்களில் காணக்கிடைக்காத திரைப்படங்கள் இந்தத் திரைப்பட விழாக்களில் திரையிடப் படுகின்றன.
சிறப்பான வாய்ப்பு
திறமைவாய்ந்த கலைஞர்களின் திரைப்படங்கள், புதுப்புனைவுத் திரைப்படங்களுக்கு இந்த விழாக்கள் தோரணவாயில் திறக்கின்றன. மேலும் வலைத்தளங்களில் குவிந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் தரமான படங்களைத் தேர்வு செய்து பார்ப்பதென்பது சராசரி ரசிகருக்குப் பெரும் பிரயத்தனம் ஆகிவிடும். திரைப்படக் கலைஞர்கள், திரைவிமர்சகர்களின் விளக் கத்துடன் படத்தை முழுமையாக ரசிக்கும் வாய்ப்பும் அனு பவமும் திரைப்பட விழாக்களில் மட்டுமே சாத்தியம். புதுக்கோட்டை திரைப்பட விழாவில் 23 திரைப்படங் கள் திரையிடப்பட்டன; இவற்றில் 20 படங்கள் அயல் நாட்டுத் திரைப்படங்கள். தமிழில் “கூழாங்கல்”, “டாணாக்காரன்” என்ற திரைப் படங்கள் திரையரங்கில் திரையிடப்படாதவை. இதில், “கூழாங்கல்” முற்றிலும் புதிய கலைஞர்களால் உருவாக்கப்பட்ட படம். ஆனால், கலைநேர்த்தியிலும், கதைசொல்லும் முறையிலும் திரைத்துறைக்கு முற்றிலும் புதிய படம். ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைக் கருவியாக ஆங்கி லேயரால் உருவாக்கப்பட்ட போலீஸ் துறை “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று பிரகடனப்படுத்தப் பட்ட பின்னும் அதே நோக்கத்துடன் தொடர்ந்து உருவாக்கப் படுவதைச் சித்தரிக்கும் படம் “டாணாக்காரன்”. இவைதவிர, 77-ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் இடம்பெற்ற மராத்திப் படம் Disciple. சைதன்யா தமனே இயக்கியுள்ள படம். மரபிசைக்கு வாழ்வை அர்ப்பணித்த இசைக்கலைஞன் லட்சிய வாழ்க்கைக்கும் வணிகமயப் பட்ட யதார்த்த சூழலுக்குமிடையே அல்லாடுவதைப் பேசும் படம்.
இந்தியச் சூழலுக்கு பொருந்தும் கதை Hit the road…ஈரான், Compartment No.6-ரஷ்யா, The wild pear Tree-துருக்கி, Quavadis,Aida-போஸ்னியா, Reflection-உக்ரைன், There is no evil-ஈரான், Swimming out till the sea turns blue-ரஷ்யா ஆகிய படங்கள் அந்தந்த நாடுகளின் அரசியல் பின்னணியைக் கொண்டவை. Memories of my father என்ற கொலம்பியத் திரைப்படம் உண்மை நிகழ்வை தழுவிய கதை. மதப்பாசிசம் மேலோங்கியுள்ள இந்திய அரசியலுடன் இதைப் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது. கோவிந்த் பன்சாரே, கவுரி லங்கேஷ் போன்றவர்களின் படுகொலைகளை இப்படம் நினைவூட்டுகிறது. கலாச்சாரத் தளத்திலும் அரசியல் தளத்திலும் விழிப்பூட்டக் கூடிய இத்தகைய திரைப்படங்கள் இடதுசாரிகளுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் பயனுள்ள ஆயுதம் எனலாம். திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்ற பொதுக் கண்ணோட்டத்தை தமுஎகசவின் இந்தத் திரைப்படவிழா திருத்துகிறது. புதுக்கோட்டைத் திரைப்படவிழா பொதுமக்கள் திரைப்பட ரசிகர்களிடையே புதிய ரசனை அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை தமுஎசவின் முதல் முயற்சி முதல்தரமாக அமைந்ததில் மகிழ்ச்சி.