tamilnadu

img

சிற்றரசர் குடும்பத்தில் தோன்றி செங்கொடி உயர்த்திய தோழர் - ஜி.ராமகிருஷ்ணன்

நாட்டின் விடுதலைக்காக நடந்த போராட்டத்தின்போதே சமத்துவ சமுதாயத்திற்கான விடுதலையாகவும் இருக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகள் பல உருவாகின. அப்படி உருவான மாவட்டங்களில் ஒன்றுதான் வீரம் செறிந்த போராட்டங்கள் நடைபெற்ற இராமநாதபுரம். இப்போது சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் என மூன்று வருவாய் மாவட்டங்களாக உள்ளவை அப்போது ஒரே இராமநாதபுரம் மாவட்டமாக இருந்தன. தற்போதைய சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் பழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் கருப்புராஜா. அந்நாளைய சிவகங்கை மன்னராட்சிப் பகுதியில் ஒரு சிற்றரசர் குடும்பத்தில் 1937-ஆம் ஆண்டு பிறந்தவர். ஆனால் எளிய மக்களுக்காகத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர். சிவகங்கை நகரத்தில் மன்னர் மேல்நிலைப் பள்ளியில் படித்த கருப்புராஜா மாணவப் பருவத்திலேயே 8 நாடகங்கள் எழுதி விருது பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு வரை படித்து கிராம முன்சீப்பாக (மணியக்காரராக) வேலையில் சேர்ந்தார். தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டவர் அதன் பிரச்சார இயக்கங்களில் பங்கேற்றார்.

1965-ல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறையில் இருந்த கம்யூனிஸ்ட்  தோழர்களோடு பழகி அவர்களோடு அரசியல், சமூக நிலைமைகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிறையில் இருந்தபோதே ரஜனிபாமிதத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ என்ற நூலைப் படித்தார். ரஜனிபாமிதத் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். இந்தியாவைக் குறித்தும் உலக நாடுகளைக் குறித்தும், பாசிசம் பற்றியும் பல்வேறு நூல்களை எழுதி இருக்கிறார். ‘இன்றைய இந்தியா’ சுதந்திரப் போராட்டக் காலத்தில் பரவலாக வாசிக்கப்பட்ட நூலாகும். அந்த நூல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டுமென்ற விழைவை கருப்புராஜாவுக்கு ஏற்படுத்த, சிறையிலிருந்து வெளியே வந்தபின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் காசிநாதனைச் சந்தித்தார். அவர் இவரை மதுரை மாநகரத்திற்கு அழைத்துச் சென்று கட்சித் தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களோடு நடத்திய உரையாடல்களுக்குப் பிறகு கருப்புராஜா கட்சியில் சேர்ந்தார். விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மூன்று பகுதிகளையும் இணைத்த கட்சியின் மாவட்ட மையம் அப்போது மதுரையிலிருந்தே செயல்பட்டது. மதுரை மாவட்டத்திலிருந்து பிரிந்து இராமநாதபுரம் மாவட்டக்குழு உருவானபோது அதனுடைய முதல் மாவட்டச் செயலாளராக தோழர் எஸ்.ஏ.பெருமாள் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டக்குழுவின் முடிவின்படி மானாமதுரை, சிவகங்கை, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் கட்சிப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு கருப்புராஜாவுக்கு அளிக்கப்பட்டது.

தோழர் கருப்பு ராஜாவின் முயற்சியினால் அவரது சொந்த கிராமமான பழையனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை தொடங்கப்பட்டது. மேலும், அவருக்கு பொறுப்பளிக்கப்பட்ட பகுதிகளில் கட்சி அமைப்புகளையும், வர்க்க அமைப்புகளையும் வெகுமக்கள் அமைப்புகளையும் உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டார். பல கிராமங்களில் கட்சிக் கிளைகளை உருவாக்கியதோடு விவசாயிகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். இந்தப் பின்னணியில் விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இராமேஸ்வரம் நகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல கிளைகள் உருவாக்கப்பட்டு குறிப்பிடத்தக்க அளவுக்கு வலுவாக அங்கே கட்சி  இயங்கி வந்தது. தோழர் ஆவுல் நைனா இராமேஸ்வரம் பகுதிச் செயலாளராக செயல்பட்டு வந்தார். ஆவுல் நைனா இராமேஸ்வரம் நகர்மன்றத் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். நேர்மையாக செயல்பட்டதோடு அவர் காலத்தில் இராமேஸ்வரம் நகர மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்கள் அவர் தலைமையில் நடைபெற்றது.  தோழர் கருப்புராஜா இராமேஸ்வரத்தில் நடைபெற்ற கட்சிப் பணிகளுக்கு உதவியாக இருந்துள்ளார். (ஆவுல் நைனா குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாமிற்கு நெருங்கிய உறவினர். தன்னுடைய இளமைக் காலத்தில் அப்துல் கலாம் கம்யூனிஸ்ட் இயக்க ஆதரவாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.) பரமக்குடி நகரத்திலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கைத்தறி நெசவு  பிரதானமான தொழிலாக இருந்தது. கைத்தறி நெசவாளர்களை அமைப்பாகத் திரட்டும் பணியில் தோழர் துளசிராமன் முழுமையாக ஈடுபட்டார். அதற்கு உதவியாக அரும்பணியாற்றினார் கருப்புராஜா.

தீண்டாமை ஒழிப்புக்காக...

காளையார்கோவில் பகுதியில் வேளாரேந்தல் கிராமத்தில் தேநீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை இருந்தது. தலித் மக்களுக்கு தனியாகவும் மற்றவர்களுக்குத் தனியாகவும் தேநீர் வழங்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை நிலவியது. இதை எதிர்த்து மக்களைத் திரட்டி நடந்த போராட்டத்தில் தோழர் கருப்புராஜா முக்கிய பங்காற்றினார். அந்தப் போராட்டத்தின் பலனாக இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டது. மறவமங்கலத்தில் மூன்று குவளை முறை இருந்தது. அதாவது அருந்ததியர், ஆதி திராவிட மக்கள், பிற்படுத்தப்பட்டோர் என்று தனித்தனியாக தேநீர் வழங்கப்படும் தீண்டாமைக் கொடுமைகள் இருந்தது. இக்கொடுமையை எதிர்த்தும் தோழர் கருப்பு ராஜா முன்முயற்சியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் வெற்றியாக இங்கும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தேநீர் வழங்குவது நடைமுறைக்கு வந்தது. கீழப்பெருங்கரை கிராமத்தில் வெளிநாடு சென்றுவந்த தலித் இளைஞர் ஒருவர் செருப்பு போட்டு நடந்தார் என்ற காரணத்துக்காக சாதி ஆதிக்க வெறியர்கள் அந்த இளைஞரைத் தாக்கியதோடு பல தலித் மக்கள் வீடுகளையும் அடித்து நொறுக்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு தொடர்ந்து இயக்கம் நடத்தி அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து சுமார் 30 தலித் மக்கள் குடும்பங்களுக்கு அரசால் வீடு கட்டித் தரப்பட்டது. இந்தப் போராட்டத்திலும் கருப்புராஜா முக்கியப் பங்காற்றினார். திருப்புவனத்தில் விவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்றது. மாநாட்டு ஊர்வலத்திற்கும் பொதுக்கூட்டத்திற்கும் காவல்துறை தடை விதித்தது. தடையை மீறி ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அவற்றில் பங்கேற்ற வி.ஏ.கருப்புசாமி, ஏ.லாசர் ஆகிய தலைவர்கள் சென்ற பிறகு, கருப்புராஜா, ஆர்.கே.தண்டியப்பன் உள்ளிட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மதுரைச் சிறையில் 22 நாட்கள் அடைக்கப்பட்டனர்.

மனைப் பட்டாவிற்காக...

காளையார்கோவில் அருகே புதுக்கோட்டை கிராமத்தில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை ஆதிக்க சக்திகள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டு மனைகளை மீட்டு தலித் மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்கு தோழர் கருப்புராஜா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டமும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தலித் மக்களுக்குரிய வீட்டுமனைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கட்சியில் உறுப்பினரானதிலிருந்து தோழர் கருப்புராஜா ஆற்றிய கட்சிப் பணியை அங்கீகரிக்கும் வகையில் அவர் 1995 ஆம் ஆண்டு மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்து நடைபெற்ற மாநில மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இராமநாதபுரம், சிவகங்கை இணைந்த மாவட்டக்குழு செயலாளராக 9 ஆண்டுகளும்,

இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக பல ஆண்டுகளும் செயல்பட்டிருக்கிறார். இரண்டு முறை கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பிரதிநிதியாக கலந்துகொண்டதைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் கருப்புராஜா. கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்குழு தலைமையகம் மதுரையிலிருந்து செயல்பட்டபோது தோழர்கள் கே.பி.ஜானகியம்மாள், ஏ.பாலசுப்ரமணியம், என்.வரதராஜன் உள்ளிட்ட பல மகத்தான தலைவர்களை சந்தித்து உரையாடியதையும் அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுச் செயல்பட்டதையும் மனநிறைவோடு நினைவுகூர்கிறார். தனது கட்சி வாழ்க்கையில் பல முக்கியமான நூல்களைப் படிப்பதற்கு தோழர் எஸ்.ஏ. பெருமாள் ஊக்குவித்தார் என தோழர் கருப்புராஜா நெகிழ்வோடு கூறுகிறார். இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன் முத்துராஜ்  திருமணம் தோழர் என்.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. மகளின் திருமணம் தோழர் சங்கரய்யாவின் தலைமையில் நடைபெற்றது. தன்னுடைய இயக்கப் பணிகளுக்குத் துணைவியார் பின்பலமாக இருந்ததை  நெகிழ்வுடன் தோழர் கருப்புராஜா குறிப்பிட்டார். தற்போது, 85 வயதாகும் தோழர் கருப்புராஜா கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு தன்னால் இயன்ற இயக்கப் பணிகளைச் செய்து வருகிறார். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தோழர் கருப்புராஜா ஆற்றிவரும் ஈடுபாடு மிக்க இயக்கப்பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.