tamilnadu

img

புகழில் வல்லவன் - புலிகரம்பலூர் அ.பொன்னையன்

நெஞ்சில் நஞ்சு கெட்ட எண்ணம்
 நினைத்துக் கூடப் பார்க்காதே
வஞ்சம் கொண்ட நெஞ்சு மோசம் 
 வாழ்வில் என்றும் ஏற்காதே!

பாலைப் போல வெள்ளை உள்ளம்
 பாரில் நீயும் கொள்ளுவாய்
தேளைப் போல கொட்டு வோரை
 தீமை என்று தள்ளுவாய்!

துன்பம் கண்டு போக்க வருவோர்
 தொடர்பு கொண்டு நின்றிடு
அன்பை நீக்கித் துன்பம் தருவோர்
 அவரை விட்டுச் சென்றிடு!

வெட்டிப் பேச்சை விரும்பு வோரை
 விலக்கி நீயும் வென்றிடு
கட்டிக் கரும்பு கருத்து கொண்டோர் 
 கையைப் பிடித்து நின்றிடு! 

ஆர்வம் கொண்டு கல்வி கற்போன்
 ஆற்றல் மிக்க வல்லவன்
நேர்மை கொண்ட வாழ்வில் நின்றால்
 நிலைக்கும் புகழில் வல்லவன்!

 அடம்பி டித்துப் படிப்ப வன்தான்
 அறிவுக் குன்றில் நிற்பவன்
வடம்பி டித்துத் தேரை இழுக்கும்
 வலியோன் அவனே கற்பவன்!