tamilnadu

img

ஒரு துளி தேன்

கோவி.பால.முருகு

ஆங்கிலம் வழி தமிழில் - உதயசங்கர் ஒரு அரசன் அமைச்சருடன் அமர்ந்து சோற்றில் தேனைக் கலந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு துளித்தேன் அரசனின் கையிலிருந்து சன்னலின் அடிக்கட்டையில் விழுந்து விட்டது. “ஓ அரசே! ஒரு துளித்தேன் சன்னல் அடிக்கட்டையில் விழுந்து விட்டது..” என்றான் அமைச்சர். “கவலைப் படாதே அது நம்முடைய பிரச்னை இல்லை..” என்று சொன்னான் அரசன். சன்னல் அடிக்கட்டையிலிருந்து ஒரு துளித்தேன் கீழே தரையில் சொட்டியது. ஒரு ஈ அந்த ஒரு துளித்தேனின் மீது உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கியது. அப்போது ஒரு பல்லி பாய்ந்து ஈயைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. “மேன்மை தங்கியவரே! உங்கள் கையிலிருந்து விழுந்த தேனை ஒரு ஈ சாப்பிட்டு கொண்டிருந்தது... இப்போது தேனைச் சாப்பிட்ட ஈயை ஒரு பல்லிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது..” “கவலைப்படாதே! அது நம்முடைய பிரச்னை இல்லை..” என்றான் அரசன். ஒரு பூனை பல்லியின் மீது துள்ளிக்குதித்து அதைச் சாப்பிட தொடங்கியது. அரண்மனையிலிருந்து ஒரு நாய் வெளியில் வந்து பூனையைத் தாக்கத் தொடங்கியது. நாயும் பூனையும் அரண்மனைக்கு அருகில் சண்டை போடத் தொடங்கின. “மேன்மை தங்கியவரே! இப்போது பல்லியைப் ஒரு பூனை சாப்பிட்டது. பூனையை ஒரு நாய் தாக்கியது. அவை இரண்டும் அரண்மனைக்கு அருகில் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன..” “அப்படியா.. கவலைப்படாதே.. அது நம்முடைய பிரச்னை இல்லை..” என்றார் அரசன் பூனையின் சொந்தகாரி நாய் பூனையைத் தாக்குவதைப் பார்த்தாள். உடனே அவள் ஒரு விளக்குமாற்றுடன் ஓடி வந்தாள். நாயை அடிக்கத் தொடங்கினாள். ஆனால் நாயின் சொந்தக்காரன் அவள் நாயை அடிப்பதைப் பார்த்ததும், ஓடிவந்து அவளை அடிக்கத் தொடங்கினான்.

“மேன்மை தங்கியவரே! உங்கள் கையிலிருந்து ஒரு துளித்தேன் விழுந்தது. ஒரு ஈ அதைச் சாப்பிடத் தொடங்கியது..ஒரு பல்லி அதைச் சாப்பிட்டது.. பூனை பல்லியைச் சாப்பிட்டது.. நாய் பூனையைத் தாக்கியது..அப்புறம் பூனையின் சொந்தக்காரி நாயை அடித்தாள்.. இப்போது நாயின் சொந்தக்காரன் பூனையின் சொந்தக்காரியை அடித்துக் கொண்டிருக்கிறான்.. இரண்டு பேரும் அரண்மனைக்கு அருகில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. நான் யாரையாவது அனுப்பி சண்டையை நிறுத்துகிறேன்..” “கவலைப்பாடாதே.. அது நம்முடைய பிரச்னை இல்லை..” என்றான் அரசன். அந்தப் பெண்ணின் நண்பர்கள் சிலர் என்ன நடக்கிறது என்று பார்த்தார்கள். அவர்கள் அவளைக் காப்பாற்ற விரைந்தார்கள். அந்த ஆளின் நண்பர்களும் என்ன நடக்கிறது என்று பார்த்தார்கள். அவர்களும் அவனைக் காப்பாற்ற ஓடினார்கள். உடனே அரண்மனைக்கு அருகில் பெரிய கைகலப்பு நடக்க ஆரம்பித்தது. “மேன்மை தங்கியவரே! அந்தப் பெண்ணின் நண்பர்கள் அந்த ஆணை அடிக்கிறார்கள்.. அந்த ஆணின் நண்பர்கள் பெண்ணின் நண்பர்களை அடிக்கிறார்கள்.. ஒரு பெரிய சண்டை அரண்மனைக்கு அருகில் நடந்து கொண்டிருக்கிறது..

நாம் ஏதாவது செய்து இதை நிறுத்த வேண்டும். “ “கவலைப்படாதே.. அது நம்முடைய பிரச்னை இல்லை..” என்று அரசன் கறாராக சொன்னான். அந்த வ்ழியாக படைவீரர்கள் நகரத்துக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சண்டையைப் பார்த்ததும் அதை நிறுத்துவதற்காக அவர்கள் ஓடினார்கள். ஆனால் அவர்கள் அங்கே நடந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டதும் சிலர் அந்த ஆணின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். சிலர் அந்தப் பெண்ணின் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். அந்தப் படைவீரர்கள் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். ஒரு உள்நாட்டுப்போர் தொடங்கியது. அந்தப் போரில் அரண்மனை எரிந்து சாம்பலானது. அரசனும் அவனது அமைச்சரும் சாம்பலில் நின்றார்கள். அப்போது அரசன் சொன்னான், “உண்மைதான் ஒரு துளித்தேன் நம்முடைய பிரச்னை தான் என்று நினைக்கிறேன்..”