திருநெல்வேலி, டிச.17- திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்தனர். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் அருகே, திருநெல்வேலி சிஎஸ்ஐ மறைமாவட்டத்தால் நிர்வகிக்கப்படும், 143 ஆண்டுகள் பழமையான சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறையின் தடுப்புச் சுவர் வெள்ளியன்று காலை 10.50 மணியளவில் இடிந்து விழுந்தது.இதில் இப்பள்ளியைச் சேர்நத மாணவர்களான டி.விஸ்வரஞ்சன், கே,அன்பழகன், ஆர்.சுதீஷ் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். எம்.இசக்கிபிரகாஷ், எஸ்.சஞ்சய், ஷேக்அபுபக்கர் கித்தானி, அப்துல்லா ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து திருநெல்வேலி நகர் காவல் ஆணையர் என்.கே. செந்தாமரைக்கண்ணன், திருநெல்வேலி மேற்கு காவல் துணை ஆணையர் ஆகியோருடன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.
மாவட்டத் தலைமையகத்திலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள ராதாபுரத்தில் நடைபெற்ற மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு, விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்த மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், இடிந்து விழுந்த ‘ சுவருக்கு’ சரியான அடித்தளம் இல்லை என்று கூறினர். முதல்வர் நிவாரண நிதி அறிவிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அறிவித்தது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்த மாணவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சமும் உடனடியாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.