tamilnadu

img

அலெய்டா குவேரா, டீஸ்டா செதல்வாத் பங்கேற்புடன் திருவனந்தபுரத்தில் எழுச்சியுடன் தொடங்கியது

திருவனந்தபுரம்  (எம்.சி.ஜோசபைன் நகர்), ஜன. 6- நாட்டின் மிகப் பெரிய பெண்கள் இயக்கமான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13 ஆவது அகில இந்திய மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்க திருவனந்தபுரத்தில் ஜனவரி 6 வெள்ளியன்று துவங்கியது. திருவனந்தபுரம் எம்.சி.ஜோசபின் நகரில் (தாகூர் தியேட்டர்) பொது மாநாட்டை கேரள கலாமண்டலம் பல்கலைக்கழக (தன்னாட்சி) வேந்தரும் நடனக் கலைஞருமான மல்லிகா சாராபாய் துவக்கி வைத்தார். அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா கொடி ஏற்றியதுடன் மாநாட்டுக்கு தலைமை வகித்து அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார்.

வரவேற்புக்குழு தலைவர் ஸ்ரீமதி வரவேற்றார். சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் புரவலருமான பிருந்தா காரத் துவக்கவுரையாற்றினார். உலகம் முழுவதும் எழுச்சியூட்டும் தியாகி சே குவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா, மனித உரிமைப் போராளி டீஸ்டா செதல்வாத் உள்ளிட்டோர் பேசினர். அலெய்டாவின் மகள் எஸ்தபாநோ குவேரா, சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள் சுபாஷினி அலி, பி.கே.ஷைனபா, சூசன் கோடி, சி.எஸ்.சுஜாதா, உ.வாசுகி, பி.சுகந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், ஆனாவூர் நாகப்பன், கடகம்பள்ளி சுரேந்திரன், வி.ஜாய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் ரேவதி உள்பட நாடுமுழுவதும் அதிகார வர்க்க அடக்கு முறைகளுக்கு எதிராக களம்கண்ட பெண் போராளிகள் சிறப்பிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. பிற்பகல் துவங்கிய பிரதிநிதிகள் மாநாட்டில் அகில இந்திய செயலாளர் மரியம் தாவ்லே அறிக்கை சமர்ப்பித்தார். பிரதிநிதிகள் விவாதம், ஒரு லட்சம் பெண்கள் பங்கேற்கும் பேரணி பொதுக்கூட்டத்துடன் மாநாடு திங்களன்று (ஜன.9) நிறைவடைகிறது. நிறைவு பொதுக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் உரையாற்ற உள்ளார்.

‘அவரது உருவம் பொறிக்காத போராட்டக் கொடிகளே இல்லை’

“எங்கள் அன்புத் தோழி அலெய்டா... உங்களது தந்தை தோழர் சே, என்றென்றும் எங்கள் எல்லோருக்கும் உந்து சக்தி; இந்திய இளைஞர்களின் கனவு நாயகனாக இன்றைக்கும் திகழ்கிறார் சே; அவரது உருவப்படம் பொறிக்காத  எங்களது போராட்டக் கொடிகளே இல்லை...”  - மேடையில் அமர்ந்திருந்த அலெய்டா குவேராவைப் பார்த்து, பிருந்தா காரத் பேசிய போது அரங்கமே அதிர்ந்தது. பிரதிநிதிகளின் கரவொலி பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி யது.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13வது அகில இந்திய மாநாட்டு மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் அலெய்டா. தலைசிறந்த பெண்ணுரிமைப் போராளிகளான மாதர் சங்கத் தலைவர்களுடனும், மல்லிகா சாராபாய், டீஸ்டா செதல்வாத், மதுரா சுவாமிநாதன் உள்ளிட்ட மகத்தான ஆளுமைகளுடனும், கியூபப் புரட்சியின் மாபெரும் நாயகன் சே குவேராவின் மகளும், பேத்தியும் பங்கேற்றிருந்தார்கள்.  மாநாட்டில் துவக்கவுரையாற்றிய பிருந்தா காரத், அலெய்டாவைப் பார்த்து செவ்வணக்கம் செலுத்தியவாறு பேசிய பேச்சு, மாநாட்டு பிரதிநிதிகளை உணர்ச்சிப் பேரலைகளில்  ஆழ்த்தியது. 

“தோழர் சேகுவேராவின் குடும்பத்தினரை வரவேற்பதில் நாம் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். மகத்தான கம்யூனிஸ்ட் புரட்சியாளர், உலக இளைஞர்களின் கதாநாயகன் தோழர் சே குவேரா. அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட போராளி. சோசலிசத்தின் மாண்புகளை உலகிற்கு உணர்த்திய சே-யின் மகள் அலெய்டாவும், பேத்தியும் நமது மாநாட்டில் பங்கேற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. நாடு முழுவதும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியத்தின் சூறையாடல்களுக்கு எதிராகவும் நடைபெறும் எண்ணற்ற போராட்டங்களில் சே குவேராவின் உருவம் பொறித்த செங்கொடிகளே முன்செல்கின்றன. இந்த மகத்தான தருணத்தில் கியூப மக்களுடனான நமது வலுவான உறவினை, ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்து கிறோம்; கியூபாவில் அமலில் இருக்கும் சோசலிச அமைப்பு முறையை அழிக்கும் நோக்கத்துடன், அந்த நாட்டையே நிர்மூலமாக்கும் நோக்கத்துடன் எத்தனை எத்தனை தடைகளை விதித்துள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம்! நீண்ட  பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிற அந்த மனிதத்தன்மை யற்ற, குரூரமான தாக்குதலுக்கு எதிராக, சோசலிசத்தை உயர்த்திப் பிடித்து தங்களது தேசத்தைப் பாதுகாத்து வரும் கியூபாவின் பெண்கள் அனைவருக்கும் செவ்வணக்கம் செலுத்துகிறோம்.  சோசலிச கியூபா தனது குடும்ப அமைப்புகள் அனைத்தை யும் மிக முற்போக்கான முறையில் ஜனநாயகப்படுத்தியுள்ளது. குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமத்துவத்தை உறுதிசெய்து, குடும்ப உறவுகளில் ஜனநாயகத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அத்தகைய நடவடிக்கைகளை அமலாக்கியுள்ள கியூப மக்களை மாதர் சங்க மாநாடு பாராட்டுகிறது; தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.  தோழர் சேயின் வார்த்தைகளை நினைவு கூர்கிறேன்; “எந்தவொரு அநீதியையும் பார்த்து சமரசமின்றி கொந்தளித்து எழுவாயானால் நீயும் எனது தோழனே!”.

தோழர் சேயின் இதே முழக்கத்துடன் உலகம் முழுவதும்  உள்ள - தங்களது உரிமைகளுக்காக பெரும் போராட்டங்களை  நடத்திக் கொண்டிருக்கின்ற அனைத்து மாதர் இயக்கங்களு டனும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.  உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று தாக்கியபோது முதலாளித்துவ நாடுகள் செயலிழந்து நின்றதைப் பார்த்தோம்; அவற்றின் சுகாதாரக் கட்டமைப்புகள் முற்றிலும் கொள்ளை லாபம் பார்க்கும் தொழிலாக தனியார்மயமாக்கப்பட்டிருந்த நிலையில் சோசலிச அமைப்பு முறை மட்டுமே மக்களைப் பாதுகாத்தது. உலகின் பல பகுதிகளில் இத்தகைய துயரங்களி லிருந்து பெண்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உறு தியோடு அமலாக்கி வருகிற - பாலின அநீதியை முறியடித்து வருகிற சோசலிச நாடுகளுடன் மாதர் சங்கம் தனது ஆதரவை யும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.  இந்த மாநாடு மீண்டும் ஒரு முறை கியூபாவுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறது; சோசலிச கியூபா நிடூழி வாழ்க!