tamilnadu

தடுப்பூசி செலுத்தாத 1 கோடி பேர்: சுகாதாரத்துறை வேதனை!

சென்னை,பிப்.7- தமிழ்நாட்டில் 1 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த மாதம் உச்சத்தை அடைந்து, அதிகரித்த கொரோனா தற்போது குறைந்து கொண்டே வந்தாலும், முகக்கவசம் அணிவதை நிறுத்தக் கூடாது. மக்கள் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும். மேலும், ராணிபேட்டை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 10 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து இருந்தாலும், கேரள எல்லையான கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில், ஆந்திரா எல்லையான திருவள்ளூர் மாவட்டம் மற்றும், சுற்றுலா தளம் உள்ள நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் தனி கவனம் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 4 விழுக்காடு படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளது.

அதுமட்டுமின்றி ஜனவரியில் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் ஏழரை லட்சம் பேர் என்கிற நிலையில், தற்போது 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தமிழகத்தில் பூஸ்டர் செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் புற்றுநோய் போன்ற இதர நோய்களை பொதுமக்கள் மறந்து விடக்கூடாது என்றும், ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் 2012 ஆம் ஆண்டு 53,022 பேருக்கு புற்று நோய் பாதித்தது, இந்நிலை 2021 ஆம் ஆண்டு 81,814 ஆக உயர்ந்துள்ளது. அதில் கடந்த ஆண்டு மட்டும் 55 விழுக்காடு பெண்களும், 45 விழுக்காடு ஆண்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆண்களுக்கு பெரும்பாலும் வாய்புற்று, நுரையீரல், வயிற்று புற்றுநோய் அதிகம் பாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு அதிகமாக கர்பப்பை வாய் மற்றும் மார்பக புற்று நோய் அதிகமாக உள்ளது. இதனால் ஆரம்ப காலத்தில் சிகிச்சைக்கு வந்தால் 75 விழுக்காடு வரை குணப்படுத்த முடியும் எனவும், கவரப்பேட்டையில் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.200 கோடி மதிப்பில் ஒப்புயிர் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தொற்றா நோய் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.  இன்னுயிர் காப்போம் திட்டம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஜனவரியில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில்  1.06 கோடி பேர் 2 ஆவது தவனை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.