tamilnadu

img

மும்பையில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்பு  


மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வரும் நிலையில்  இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மும்பை வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் கே.எஸ்.ஹோசாலிகார் தனது டுவிட்டர் பக்கத்தில், “வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சனி மற்றும் ஞாயிறன்று மும்பையில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கு கடற்கரை பகுதிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இரவு முழுவதும் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கோரேகோன், கண்டவாலி மற்றும் தாஹிசர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழையின் காரணமாக மத்திய ரெயில் பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இதனால் புறநகர் ரெயில் 15-20 நிமிடம் தாமதமானது. மத்திய ரெயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரியான சுனில் உதசி கூறுகையில், "மழையின் காரணமாக ரெயில்கள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகவும் கவனமாக இயக்கப்படுகிறது"மழை இன்னும் தீவிரமடையும் எனவும், வடக்கு கொங்கன், தானே மற்றும் பால்கர் போன்ற பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஆறு மணிநேரத்திற்கு மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இதனால் தானே பகுதியில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காரணப்படுவதால் பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.