tamilnadu

கொள்ளிடம் ஒன்றியத்துக்குச் சொந்தமான ரோடு ரோலர் எங்கே?

சீர்காழி, ஆக.2- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் ஒன்றிய அவைக்கூடத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், கொள்ளிடம் வட்டாரத்தில் இரண்டு மாதங்களில் 7219 குடும்பங்களின் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு அரசின் கான்கிரீட் வீடுகள் கட்டும்பணி துவங்கப்படும்.  கொள்ளிடத்தை தலைமையிடமாகக் கொண்டு தாலுகா அமைக்கவும் கொள்ளிடத்தில் ஆரம்ப காலம் முதல் இயங்கி வரும் துணைப்பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது.  சீர்காழியில் அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர் அங்குதன் பேசுகையில், கொள்ளிடம் ஒன்றியத்துக்குக்குச் சொந்தமான மாயமான ரோடு ரோலர் கடந்த 8 வருடங்களாக எங்கே சென்றது? என்றும் திருமுல்லைவாசலுக்கும் கீழமூவர்க்கரைக்கும் இடையே உப்பனாற்றின் குறுக்கே ரூ.40 கோடி மதிப்பிட்டில் பாலம் கட்டும் பணி முடிவு பெறாமல் நிறுத்தப்பட்டு 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கூழையாறு கடற்கரைப்பகுதியை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்றார்.