திருச்சிராப்பள்ளி, ஜூலை 5- ஒப்பந்த ஊழியர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு ரூ. 380 தினக்கூலியை வாரியமே நேரடியாக வழங்க வேண்டும். மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்கள் இல்லை என பொய்யான தகவலை தெரிவிப்பதை கைவிட வேண்டும். அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் உடனடியாக பணி நிரந்தரப்படுத்த வேண்டும். மின் நீட்டிப்பு மற்றும் விஸ்தரிப்பு பணிகளுக்கு ஒப்பந்த ஊழியர்களையே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் வெள்ளியன்று மன்னார்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி திட்ட செயலாளர் செல்வராசு, டிஎன்பிஇஓ மாநில துணைப் பொதுச் செயலாளர் இருதயராஜ், லால்குடி கோட்டச் செயலாளர் பழனியாண்டி, துறையூர் கோட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மணப்பாறை கோட்டச் செயலாளர் ரியாஜூதீன், நகர கோட்டச் செயலாளர் நடராஜன் ஆகியோர் பேசினர். திருச்சி ஒப்பந்த ஊழியர் கிராமியம் சந்திரமோகன் நன்றி கூறினார்.