பெரம்பலூர், மார்ச் 10- தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியமாக வழங்க வேண்டிய பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் முறைகேடுகளை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை 250 நாட்களாக உயர்த்தி இத் திட்டத்தை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பெரம்பலூரில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் முழக்க போராட்டம் நடத்தி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். விதொச மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பக்கிரிசாமி கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.தேவகி, வி.ஜோதி, ஆரோக்கியசாமி மற்றும் நிர்வாகிகள் சரசு, சாரதா, இளங்கோவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.