tamilnadu

முசிறி பகுதியில் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பு

முசிறி, ஏப்.2- பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பாரிவேந்தர், முசிறி கிழக்கு ஒன்றியத்தில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். முசிறி கிழக்கு, மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்தபுலிவலம், பெரமங்கலம், செல்லாங்கரை, உடையாம்பட்டி, பெரியகாட்டுகுளம், மூவானூர், அய்யம்பாளையம், திருத்தியமலை, சுக்காம்பட்டி, தண்டலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணியின் வேட்பாளர் பாரிவேந்தர் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, பெரம்பலூர் நாடாளுமன்ற எம்பியாக மக்களாகிய நீங்கள் தேர்வு செய்தால் வருடத்திற்கு உங்கள் பகுதியைச் சேர்ந்த 300மாணவ, மாணவிகளுக்கு இலவச உயர் கல்வியும்,வேளாண் பல்கலைக்கழகம் மூலம் விவசாயத்திற்குதேவையான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களையும் செய்து தருவேன். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவேன். குறிப்பாக பெரம்பலூரில் பொருளாதார சிறப்பு மண்டலமும், அரசு மருத்துவக்கல்லூரியும் அமைந்திட பாடுபடுவேன் என்று கூறினார். பிரச்சாரப் பயணத்தில் திருச்சி திமுக வடக்கு மாவட்டச்செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், ஒன்றியச் செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

;