பெரம்பலூர், நவ.1- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மற்றும் குன்னம் வட்டாரங்களில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் கிளைகள் துவக்க விழா புதன்கிழமையன்று நடைபெற்றது. முதலாவதாக நெய்குப்பை கிராமத்தில் கொடியேற்றி துவக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீராசாமி வரவேற்றார். நிர்வாகிகள் அ.குமார், பி.முத்துசாமி, முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் எம்.சின்னதுரை கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட கௌரவத் தலைவர் பி.ரமேஷ், மாதர் சங்க நிர்வாகி எ.கலையரசி, மாவட்டச் செயலாளர் ஜி.சங்கர், பொருளாளர் ஜி.பாண்டுரங்கன், துணைத் தலைவர் பாலுசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பாரம்பரியமான மாட்டு வண்டி தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லாறு மற்றும் வெள்ளாற்றில் மாட்டு வண்டிக்கு தனியாக மணல் குவாரி அமைத்திட வேண்டும். அரியலூர் மாவட்டத்தை போல் பெரம்பலூர் மாவட்டத்திலும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவ.14 ஆம் தேதி குடும்பத்துடன் பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் என்.புதூர், ஒகளுர், அத்தியூர், அகரம்சிகூர், வயலப்பாடி, கீழப்பெரம்பலூர், வீரம நல்லூர், துங்கபுரம், கோவில்பாளையம் ஆகிய கிராமங்களில் கொடி யேற்றி சங்க கிளைகள் துவக்கப்பட்டன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.