tamilnadu

img

வாக்கு எந்திரக் கோளாறுகள்

புதுதில்லி:

தில்லியில் சோதனை வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து புகார் தெரிவித்த விவகாரத்தில் தில்லி தலைமை தேர்தல் அலுவலகம் விசாரணை நடத்துமா என கேள்வி எழுந்துள்ளது.

 

மேற்கு தில்லி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மட்டியாலா சட்டமன்றத் தொகுதியில்(பூத் எண்.9) வாக்குப்பதிவுக்கு முன்னதாக நடைபெற்ற சோதனை வாக்குப் பதிவு பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர் மிலன் குப்தா என்பவர் சோதனை மேற்கொண்டார். அப்போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவர் அழுத்திய சின்னத்தின் பொத்தான் சிவப்பு விளக்கை சரியாக காட்டியபோதும், விவிபேட் இயந்திரம் வேறு சின்னத்தை காட்டியுள்ளது. 


இதுகுறித்து, அவர் வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த தலைமை அதிகாரி, வழிகாட்டி அதிகாரியை அணுகுமாறும், வழி காட்டி அதிகாரி துறை அதிகாரியை அணுகுமாறும் தெரிவித்துள்ளனர். இந்த அதிகாரிகள் அனைவரும், இதுகுறித்து புகார் அளிக்க வேண்டாம் என அவரிடம் கூறியுள்ளனர். 

ஆனால், புகார் அளித்த மிலன் குப்தா கூறியதாவது: இதை மீறி புகார் அளித்தால், நான் ஐபிசி 177 பிரிவின்கீழ் கைது செய்யப்படுவேன் என்றனர். இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுவது குறித்து ஆராய்ந்தபோது, நீதிமன்ற உத்தரவின்றி, இப்பிரிவின் கீழ் கைது செய்ய முடியாது என தெரியவந்தது. 


இப்பிரச்சனை காரணமாக, தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குப்பதிவை நிறுத்த முடியாது என்பதால், நான் மீண்டும் சோதனை வாக்குப்பதிவு நடத்த ஒப்புக்கொண்டேன். பின்னரும் கூட, அந்த அதிகாரிகள் (வாக்குச்சாவடியின் தலை மை அதிகாரி, வழிகாட்டி அதிகாரி, துறை அதிகாரி) இந்த புகாரை திரும்பப் பெறுமாறு வற்புறுத்தினர். 

மறு சோதனை வாக்குப்பதிவின்போது, என்னை வாக்குப்பதிவு இயந்திரம் முன்பு நிறுத்தி, என் கண்களை மூடி, தோராயமாக ஏதாவது ஒரு பொத்தானை அழுத்துமாறு கூறினர். முன்பு நடந்த சோதனை பதிவில், நான் எந்த சின்னத்தை அழுத்தி சோதனை மேற்கொண்டேன் என்பதை தெரிவிக்க விரும்பவில்லை.


இதில், நான் எந்த சின்னத்தை அழுத்தினேனோ, அதன் சரியான சின்னத்தை சில விநாடிகளில் விவிபேட் இயந்திரம் காட்டியது. இதனை சாக்காக கொண்ட அதிகாரிகள், நானாக ஏதோ ஒரு புகாரை கூறுகிறேன் என குற்றம்சாட்டினர். மேலும், அந்த அதிகாரிகள், நீங்கள் சொன்னபடி இங்கு எதுவும் நடக்கவில்லை என குற்றம்சாட்டி, காவல்துறையினரிடம் என்னை கைது செய்யுமாறு கூறினர்.


காவல்துறையினர் என்னை துவாரகா காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்ற னர். ஆனால், எனக்கு எதிராக என்ன நட வடிக்கை எடுப்பது என அவர்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து வாக்குப்பதிவு அதிகாரி கூறுகையில், வாக்குப்பதிவு நேரங்களில் தவறான புகார்களை தெரிவித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு. வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது, சோதனை வாக்குப்பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும் என்றார். இந்த புகார் குறித்து, தில்லி தலைமை தேர்தல் அலுவலகம் விசாரணை நடத்த தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா கேட்டுக் கொண்டுள்ளார்.(பிடிஐ)