தொற்று நோய் அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியதற்காகவும், தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்பாகப் பணியாற்றியதற்காகவும் கேரள மாநில சுகாதாரத் துறைக்கு ஐ.நா. சபை விருது வழங்கி கவுரவித்துள்ளது.
மக்களுக்கான சுகாதாரப் பணிகளில் முன்னணியில் உள்ள கேரள அரசின் சுகாதார பணியை பாராட்டி UNIAT என்ற விருதை உலக சுகாதா அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாஸிஸ் அறிவித்துள்ளர். இதுகுறித்து அவர் விடுத்த அறிவிப்பில், கடந்த 2019-ம் ஆண்டில் தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியதற்காகவும், தடுப்பு நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்தமைக்காகவும், மனநலம் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் போன்றவற்றை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் வரலாற்றிலேயே ஒரு நாட்டின் மாநிலம் சுகாதாரத் துறைக்காகச் சிறப்பு விருது பெற்றிருப்பது இதுதான் முதல் முறையாகும்.
இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஷைலஜா டீச்சர் கூறுகையில், “சுகாதாரத் துறையில் ஓய்வின்றி கேரள அரசு உழைத்ததன் அங்கீகாரமாக ஐ.நா. இந்த விருதை வழங்கியுள்ளது. மேலும் இவ்விருதுக்குக் காரணமாக இருந்த அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா நோய் தொற்று பரவலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காக கடந்த ஜூன் மாதம் ஐ.நா.வின் பொதுச்சேவை நாளில் பேசுவதற்கு கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா டீச்சரை சிறப்பு அழைப்பாளராக ஐ.நா. அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு உலக அளவில் 6 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அதில் கேரள அமைச்சர் ஷைலஜாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.