ரேஷன் கடை தராசுத் தட்டு ஒரு பக்கம் சாயக்கூடாதென்று சொன்னதற்காக இன்று ரோட்டில் சாய்ந்து கிடக்கிறாய்... தண்ணீருக்கு காசு கேட்டதை தட்டிக் கேட்டதற்காக இன்று வீதியில் ஓடுகிறது உன் இரத்தம்... வாய்ச்சொல் வீரர்களுக்கு மத்தியில் வளர்ந்த வில்லாபுரத்தின் வீரத்தாய் நீ ... கூலிப்படையால் வெட்டப்பட்ட சேகுவேராவின் கைகளும் ... கைக்கூலிகளால் வெட்டப்பட்ட உன் விரல்களும் என்றும் எங்களை தழுவி நிற்கும்...
-எழுத்தாளரும் இன்றைய மதுரை நாடாளுமன்ற
உறுப்பினருமான சு.வெங்டேசனின் கவிதை வரிகள் 23 ஆண்டுகளுக்குப் பின்னரும் தோழர் லீலாவதியை நினைக்கும் போதெல்லாம் அதே உணர்வுடன் நம்மை உத்வேகமூட்டுகின்றன.
1997 ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி இம்மண்ணில் விதைக் கப்பட்டார் வீராங்கனை லீலாவதி.
மதுரையில் சமூக விரோத கும்பல் மாமூல் வசூலிப்பது, மாநகராட்சி லாரிகள் மூலம் வரும் தண்ணீரை காசுக்கு விற்பது, ரேசன் கடை முறைகேடுகள், ஆதிக்கத்தை நிலை நிறுத்த சமூக விரோத செயல்களை மேற்கொள்வது என பல்வேறு மோசமான செயல்களை மேற்கொண்டிருந்த நேரத்தில்தான் இச்செயலுக்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னின்று நடத்தியது. இப்போராட்டங்களில் தோழர். லீலாவதி முன்னணியில் நின்று செயல்பட்டு வந்தார். இந்நிலையில்தான் மாமன்ற தேர்தலில் போட்டியிட்டு எளிய முறையில் மக்களை சந்தித்து தன்னுடைய கடுமையான போராட்டத்திற்கு பின்னர் வெற்றி பெற்றார் தோழர் லீலாவதி.
மதுரை மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவுடன் தனக்கு கிடைத்த பொறுப்பை பயன்படுத்தி தினமும் காலை 6 மணி முதலே மக்களை சந்திக்க துவங்கினார். மக்கள் பிரச்ச னைக்காக மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகம் சென்று அதிகாரிகளை குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலி யுறுத்தி வந்தார். குடிநீர் விநியோகம் 58 இடங்களில் குழாய் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தன் கைப்பட எழுதிய கடிதங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.
இப்படி மக்கள் நலனுக்காக அயராது பாடுபட்ட வந்த நிலை யில் தான் சமூக விரோத சக்திகளாக இருந்த கோழைகளின் கொடூரச் செயலினால் வெட்டி வீழ்த்தப்பட்டார் தோழர்.லீலாவதி... தோழர் லீலாவதியின் அரும்பணியால் குழாய் மூலம் குடி நீர் வர துவங்கியது. அப்படி வந்த முதல் குடிநீரை, லீலாவதி வெட்டிக் கொல்லப்பட்ட இடத்தில் தெளித்து தங்களது அஞ்சலி யை செலுத்தினர் வில்லாபுரத்து மக்கள். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் மனதில் வாழும் வீராங்கனையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் அருமைத் தோழர் லீலாவதி.
எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போது குடும்ப வறுமையின் காரண மாக படிப்பை விட்டுவிட்டு நெசவு வேலையில் ஈடுபட்டு வந்தார். பள்ளிப்படிப்பை விட்ட போதும் வாசிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நெசவு வேலைகளை செய்துகொண்டே பொது நூலகத்திலும் உறுப்பினராகி அங்கிருந்து நூல்களை தொடர்ந்து வாங்கிப் படித்து தனது பொது அறிவை வளர்த்துக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்து வந்தார். திரு மணத்திற்குப் பிறகு தன்னுடைய கணவருடன் இணைந்து பொது வாழ்க்கையிலும் ஈடுபடத் துவங்கினார்.
வில்லாபுரத்தில் 32 குடியிருப்புகள் இருக்கக்கூடிய காம்ப வுண்டில் ஒரே அறை கொண்ட வீட்டில் நெசவுக்கு போடப்பட்ட தறிக்கும் மத்தியில் தன்னுடைய மூன்று மகள்கள், கணவ ருடன் மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்.கொள் கைக்காக எந்தவிதமான உழைப்பையும் போராட்டத்தையும் முன்னெடுத்து உயிர் கொடுக்கவும் தயங்காத தோழர் லீலா வதி தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாணிக்கம் ஆவார். இத்தகைய மகத்தான வாழ்வு வாழ்ந்தவரை நினைவு கூரக் கூடிய முறையில் ஏப்ரல் 23 அன்று கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவும் விதமாக தமிழகம் முழுவதும் இரத்ததானம் செய்யக்கூடிய பணிகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுக்கவுள்ளது.
“தன்னிலிருந்து
ஒன்றை தருவதல்ல
தானம்
தன்னையே
தருவதுதான் தானம்”
என்ற கலீல் ஜிப்ரானின் வார்த்தைகளை வாழ்ந்து காட்டிய தோழர் லீலாவதிக்கு வீரவணக்கம்.
கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ அவசர சிகிச்சை மற்றும் பிரசவம் ஆகியவற்றிற்கு இரத்தம் தேவைப் படும் சுழலில் இரத்த சாட்சியான தோழர் லீலாவதி நினைவு நாளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் இரத்ததானம் செய்யும் பணியை முன்னெடுப்போம்!