tamilnadu

img

அரசமைப்புச்சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது - கே.கே. ராகேஷ்

புதுதில்லி, ஆக. 6-

நம் அரசமைப்புச் சட்டம் ஆட்சியாளர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை எதிர்த்துப் போராட அனைத்து மக்களும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் கே.கே. ராகேஷ் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்கள் அன்று ஜம்மு-காஷ்மீர் மாநில சீரமைப்புச் சட்டமுன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று கே.கே.ராகேஷ் பேசியதாவது:

அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான முமைறயில் இங்கே தாக்கல் செய்யப்பட்டிருக்கிற இந்தச் சட்டமுன்வடிவைக் கடுமையாக எதிர்க்கிறேன்.

நம் அரசமைப்புச் சட்டம் மற்றும் நம் ஜனநாயகத்தின் மாண்புகள் படுகொலை செய்யப்படுவதற்குச் சாட்சியமாக இருந்து கொண்டிருக்கிறோம்.  நம் நாட்டின் மதச்சார்பின்மை வலைப் பின்னல் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

32 வரிகள் உள்ள ஒரு தீர்மானத்தில் இந்த அரசு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தைக் கொன்றிருக்கிறது. ஓர் அசாதாரணமான சூழ்நிலை அம்மாநிலத்தில் நிலவிக் கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலமே இனி கிடையாது. அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சட்டமுன்வடிவை அம்மாநில மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. அது உண்மையாயின், பின் ஏன் 35 ஆயிரம் துருப்புகளை அம்மாநிலத்திற்கு அனுப்பி இருக்கிறீர்கள்?  எங்கள் கட்சித் தலைவர் முகமது யூசுப் தாரிகமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைக் கைது செய்து ஏன் வீட்டுக்காவலில் வைத்திருக்கிறீர்கள்?

இந்தச் சட்டமுன்வடிவை சில மாநிலக் கட்சிகள் ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற நிலைமை தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா மற்றும் வேறெந்த மாநிலத்திற்கும் ஏற்படலாம். இதுமிகவும் மோசமான நிலைமையாகும்.

பாஸ்டர் நிமோலர் (Pastor Niemoller) அவர்கள் கூறிய பொருள்பொதிந்த ஒருசில வாக்கியங்களைப் படிக்க விரும்புகிறேன். அவர் கூறினார்: “முதலில் அவர்கள் சோசலிஸ்ட்டுகளிடம் வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில் நான் ஒரு சோசலிஸ்ட் கிடையாது. பின்னர் அவர்கள் தொழிற்சங்க வாதிகளிடம் வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில் நான் ஒரு தொழிற்சங்கவாதி கிடையாது. பின்னர் அவர்கள் யூதர்களிடம் வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில் நான் ஒரு யூதன் கிடையாது. பின்னர் அவர்கள் என்னிடம் வந்தார்கள், அப்போது எனக்காகப் பேச யாருமே இல்லை.”

நம் நாட்டிலும் நிலைமைகள் இந்தத் திசைவழியில் சென்று கொண்டிருக்கின்றன. நம் அரசமைப்புச்சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரா சித்தாந்தத்தைப் பின்பற்றிடும் ஒருஐ கட்சியிடமிருந்து வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் பாசிஸ்ட், நாஜிஸ்ட்  மற்றும் இட்லரின் சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறார்கள்.  

அவர்கள் வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். இட்லருக்கும் முசோலினிக்கும் என்ன நடந்தது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதை அவர்கள் புரிந்துகொள்ள  வேண்டும். அவர்கள் நம் நாட்டை ஒரு ஜனநாயகவிரோதமான முறையில் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.

நம் அரசமைப்புச் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்று போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் நம் ஜனநாயகத்தைக் கொல்வதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம் அரசமைப்புச் சட்டத்தைக் கொல்வதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம் ஜனநாயகத்தைக் கொல்வதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம் நாட்டின் மதச்சார்பற்ற சமூகவலைப்பின்னலைத் தகர்த்திடத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கெதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஒருவிதமாக நம்மிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதைக் குறைக்க வேண்டியது அவர்களின் பொறுப்பாகும். இதனைப் போக்குவதாக இந்த அரசு உறுதி மொழி அளித்திருந்தது. உள்துறை அமைச்சராக இருந்தவர் அங்குள்ள அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தார். பின் ஏன், இந்த அரசாங்கம் அதனைச் செய்திடவில்லை. சில அரசியல் நடைமுறைகளைப் பின்பற்ற இந்த அரசு தயாராக இல்லை.

துரதிர்ஷ்டவசமாக இந்த 32 வரி தீர்மானத்தின்மூலம், அவர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைக் கொன்று கொண்டிருக்கிறார்கள். இது அம்மாநில மக்களை மேலும் தனிமைப்படுத்துவதற்கே இட்டுச் செல்லும். இந்த அரசாங்கம் இதனைச் செய்யக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நமக்கு இந்தியாவுக்குள் ஒரு பாலஸ்தீனம் தேவையில்லை. நமக்கு மக்கள் தேவை. காஷ்மீர் நம் நாட்டின் பிரிக்கமுடியாத பகுதி என்பதில் ஐயமில்லை. அதேபோல், காஷ்மீர் மக்களும் உணரக்கூடிய விதத்தில் இருந்திட வேண்டும். அவர்கள் தனிமைப்படக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்களின் செயல்கள் இருந்துவிடக்கூடாது.

இவ்வாறு கே.கே.ராகேஷ் பேசினார்.

(ந.நி.)