புதுதில்லி:
அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை, நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நடத்துவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு நாடாளுமன்றம் ஜூன் 6-ஆம் தேதி கூடவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படவும், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற செயல் திட்டத்தை வகுக்கவும், காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் தில்லியில் சனிக்கிழமையன்று நடைப்பெற்றது.இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 52 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் உள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு தலைமை வகித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாட்டு மக்களுக்காக நாம் பணியாற்ற வேண்டும். அதற்காகவே மக்கள் நம்மை தேர்வு செய்துள்ளனர். அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கவே நாம் போராடுகிறோம் என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் மனத்தில் எண்ணி செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், “காங்கிரஸ் எம்.பிக்கள் 52 பேரும் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை இடைவிடாமல் முன்னெடுப்பார்கள்” என்றும் உறுதியளித்தார்.முன்னதாக இக்கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.