புதுதில்லி, ஆக.3-
ஊதியங்கள் சட்ட முன்வடிவு, தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இளமரம் கரீம் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமையன்று மாலை 2019ஆம் ஆண்டு ஊதியங்கள் சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் பங்கேற்று இளமரம் கரீம் பேசியதாவது:
இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) நாடு முழுதும் உள்ள உழைக்கும் மக்கள், மத்தியத் தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க, இந்தச் சட்டமுன்வடிவிற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே தினமான இன்று இங்கே இந்தச் சட்டமுன்வடிவு பரிசீலனைக்காக நம்முன் வந்திருக்கிறது.
இந்தச் சட்டமுன்வடிவு இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிரான சவாலாக அமைந்திருக்கிறது. இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்குபவர்கள் உழைக்கும் மக்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட மதிப்பின்மீது அமர்ந்துகொண்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களால் மிகவும் வஞ்சமாகவும் தொழிலாளர்களுக்குத் துரோகம் இழைக்கும் விதத்திலும் இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டமுன்வடிவினை நாங்கள் எதிர்க்கிறோம். 2018இன் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தின் முன்பு இதே போன்றதொரு சட்டமுன்வடிவின்மீது தொழிலாளர் நாடாளுமன்ற நிலைக்குழு ஒருமனதாக அளித்திட்ட பரிந்துரைகளை இந்தச் சட்டமுன்வடிவு முற்றிலுமாக உதாசீனம் செய்து புறக்கணித்துள்ளது.
இந்தச் சட்டமுன்வடிவை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனென்றால், ஊதியங்கள்/போனஸ் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில், தொழிலாளர்களின் நலன்களுக்குத் துரோகம் இழைத்திருக்கிறது, தொழிலாளர்களின் உரிமைகளைப் மிதித்துத்தள்ளியிருக்கிறது. அதேசமயத்தில் ‘வர்த்தகத்தை எளிமைப்படுத்துகிறோம்’ (‘ease of doing business’) என்ற பெயரில் வேலையளிப்பவர்களுக்கு அனுகூலமான அம்சங்களில் கவனம் செலுத்தி இருக்கிறது.
இந்தச் சட்டமுன்வடிவானது, இந்தியத் தொழிலாளர் மாநாடுகள் 15, 44, 45 மற்றும் 2015இல் கடைசியாக நடைபெற்ற 46ஆவது மாநாடுகள் ஒருமனதாக அளித்திட்ட பரிந்துரைகளை மிகவும் ஜனநாயகவிரோதமான முறையில் புறக்கணித்திருக்கிறது. மேலும் இந்தச்சட்டமுன்வடிவானது, 1992இல் உச்சநீதிமன்றம், தொழிலாளர்களின் அத்தியாவசியமான வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பதற்கான துல்லியமான விதிமுறைகளையும் (concrete formula) புறக்கணித்திருக்கிறது. இவ்வாறு இந்தியத் தொழிலாளர் மாநாடுகளும், உச்சநீதிமன்றமும் பரிந்துரைகள் செய்ததற்கு மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களும் ஏன், உங்கள் அரசாங்கம் கூட பரிந்துரைகள் செய்திருக்கிறது. எனினும் அவற்றையும்கூட இந்தச் சட்டமுன்வடிவு புறக்கணிக்கிறது.
குறைந்தபட்ச ஊதியம் சம்பந்தமாக இந்தியத் தொழிலாளர் மாநாடுகள், உச்சநீதிமன்றம் அளித்திட்ட பரிந்துரைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, அரசாங்கத்தின் கட்டளைக்குக் கட்டுப்பட்டும், கார்ப்பரேட்டுகள்/பெரும் வர்த்தகப்புள்ளிகளின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டும் அதிகாரவர்க்கத்தினர் தங்கள் இஷ்டம்போல் தான்தோன்றித்தனமாக நிர்ணயிக்கும் ஒரு தொகையை குறைந்தபட்ச ஊதியம் என்று கூறுவதற்கு இது வகைசெய்கிறது.
இந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்தபின் முழங்கிய அதன் சொந்த முழக்கமான “சப்கே சாத், சப்கே விகாஷ்”(“எல்லோருடனும், எல்லோருக்காகவும்”) என்பதைக்கூட கேலி செய்யும் விதத்தில் நாட்டில் இதுவரையிலும் மத்தியிலும், மாநிலங்களிலும் இருந்துவந்த முத்தரப்பு குறைந்தபட்ச ஊதிய ஆலோசனை வாரியம் அளித்திட்ட பரிந்துரைகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. இப்பரிந்துரைகளை இந்த அரசு ஏற்கலாம், அல்லது நிராகரிக்கலாம். அவ்வாறுகூட செய்யாமல், இவ்வாறு நாட்டில் அமலில் இருந்து வந்த முத்தரப்பு (தொழிலாளர்-முதலாளி-அரசு) என்னும் நடைமுறையையே அடித்துவீழ்த்தி இருக்கிறது.
இவ்வாறு இந்தச் சட்டமுன்வடிவானது,“கார்ப்பரேட்டுகளுடன், கார்ப்பரேட்டுகளுக்காக, தொழிலாளர்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய” (“Corporate Ka Saath, Aur Sabonka Vinash”) ஒன்றாகும்.
இந்தப் பின்னணியில், இந்தச் சட்டமுன்வடிவில் நாடு தழுவிய அளவில் ஒரு குறைந்தபட்ச ஊதியம் குறித்துக் கூறப்பட்டிருப்பதெல்லாம் முற்றிலும் ஏமாற்று வேலையாகும். குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக தொழிலாளர் அமைச்சகம் அமைத்திட்ட வல்லுநர் குழுவானது குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும் என்பது குறித்து இந்தியத் தொழிலாளர் மாநாடு அளித்திட்ட பரிந்துரைகளை யெல்லாம் அடித்துவீழ்த்தியதிலிருந்தே அரசின் வஞ்சக நோக்கம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
இதில் மேலும் வேடிக்கை வினோதம் என்னவென்றால், குறைந்தபட்ச ஊதியம் சம்பந்தமாக இந்த அரசாங்கம் அவ்வாறு நியமித்த வல்லுநர் குழு அளித்திட்ட பரிந்துரையைக்கூட, கார்ப்பரேட்டுகளின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு, இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்திருப்பதாகும். மத்தியத் தொழிலாளர் அமைச்சர் 2019 ஜூலை 10ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு 160 ரூபாயாக இருந்திடும் என்று கூறியிருக்கிறார். கடைசியில் பூனை வெளியே வந்துவிட்டது. இவ்வாறு இவர் கூறியிருக்கும் தொகை நாட்டில் 31 இடங்களில் இருக்கும் ஊதியங்களை விட குறைவானதாகும். தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் உண்மை சொரூபம் அதன் நச்சுப்பற்களுடன் வெளியே தெரியத் தொடங்கிவிட்டது.
தொழிலாளர் நிலைக்குழு இந்தச் சட்டமுன்வடிவில் ‘ஊழியர்கள்’ மற்றும் ‘தொழிலாளர்கள்’ குறித்த வரையறைகளிலிருந்த தெளிவின்மையைச் சரிசெய்து துல்லியமாகப் பரிந்துரைகளை அளித்திருந்தது. அதைக்கூட இதில் சேர்க்கவில்லை. இந்தத் தெளிவின்மையை ‘வேலையளிப்பவர்கள்’ (‘employers’) தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும்., தொழிலாளர்களைத் துன்புறுத்துவதற்காகவும், குறிப்பாக விற்பனை மேம்பாடு ஊழியர்கள் சட்டம் (Sales Promotion Employees Act), உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் (Working Journalist Act) மற்றும் சில சட்டங்களில் வரக்கூடியவர்களைத் துன்புறுத்தும் விதத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.
மேலும் இந்தச் சட்டமுன்வடிவானது, தொழிலாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கொடூரமான எண்ணத்துடன், தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தால், வேலையளிப்பவர்கள், தொழிலாளர்களின் எட்டுநாள் சம்பளத்தைப் பிடித்தம் செய்துகொள்வதற்கு அதிகாரம் அளித்திருக்கிறது. இது கண்டனத்திற்குரியதாகும்.
ஒரு வேலை நிறுத்தம் சட்டபூர்வமானதா, சட்டவிரோதமானதா என்று யார் தீர்மானிப்பது? எந்த வேலையளிப்பவர், தங்கள் நிறுவனத்தில் நடைபெறும் வேலைநிறுத்தத்தை சட்டபூர்வமானது என்று ஒப்புக்கொள்வார்? வேலைநிறுத்தம் செய்வது தொழிலாளரின் உரிமை. அவருக்கு வேலை செய்யவும் உரிமை உண்டு, வேலைநிறுத்தம் செய்யவும் உரிமை உண்டு.
எந்தவொரு சட்டத்தின் உயிர்நாடியும் அதனை அமல்படுத்தும் கருவிகள் மற்றும் அதுதொடர்பான ஷரத்துக்களாகும். இந்தச் சட்டமுன்வடிவானது இதுவரை இருந்து வந்த தொழிலாளர்நல ஆய்வாளர்களையெல்லாம் தொழிலாளர் ஆய்வாளர்/துணைதந்து ஊக்குவிப்பவர் (Inspector-cum-Facilitator) என்று மாற்றியிருக்கிறது. அவர்கள் யாருக்குத் துணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும்? இவ்வாறு அவர்கள் இதுநாள்வரை செய்துவந்த ஆய்வுப் பணிகள் மற்றும் வழக்கமான பணிகளையெல்லாம் இந்தச் சட்டம் வேலையளிப்பவர்களுக்குச் சாதகமான முறையில் மாற்றியமைத்திருக்கிறது. மேலும் ஆய்வாளர் மேலிடத்திலிருந்து முன் அனுமதி பெற்றுத்தான் ஒரு நிறுவனத்தை ஆய்வு செய்திட செல்ல வேண்டுமாம். இது ஆய்வு என்பதன் நோக்கத்தையே முழுமையாக அடித்துவீழ்த்திவிடுகிறது. எனவேதான் இந்தச் சட்டமுன்வடிவை நாங்கள் எதிர்க்கிறோம்.
இவ்வாறு இளமரம் கரீம் கூறினார்.
(ந.நி.)