tamilnadu

img

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்

எனவே இயல்பாகவே, கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் அன்றைய சட்டவிரோத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் போது அவர்களுடன் விரிவான முறையில் விவாதம் நடத்தினர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளின் சாதக மற்றும் பாதக அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்தனர். மறுபுறத்தில் மாசானியும் அவரது கும்பலும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் கொள்கைகளே மிகச் சரியானவை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்; கேரள காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், அதிலிருந்து கம்யூனிசம் என்ற முடிவுக்கு வந்தது என்பது, அவர்கள் எப்படி காந்தியிசத்திலிருந்து நேருவிய காங்கிரஸ்காரர்களாக மாறி பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளாக மாறினார்களோ அதேபோல இயல்பாக நடந்த ஒன்று.

இது கேரளாவில் மட்டுமே நடந்த தனித்த நிகழ்வல்ல. பல்வேறு மாநிலங்களில் இதேபோன்ற நிகழ்வுப் போக்குகளே நடந்தன. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஏன் சோசலிசம் என்ற நூலின் மூலம் சோசலிச இயக்கத்திற்குள் வந்தவர்கள், மீரட் மற்றும் பைஸ்பூர் ஆவணங்களின் மூலம் சோசலிச சிந்தனையில் வலுப்பட்டவர்கள், எந்தவிதத்திலும் மாசானி மற்றும் கும்பலால் பிரச்சாரம் செய்யப்பட்ட சோவியத் எதிர்ப்பு மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு முயற்சிகளுக்கு உடன்பட மறுத்துவிட்டனர். ஏன் சோசலிசம் என்ற நூலில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறிப்பிட்டது போல, இந்திய விடுதலையை வென்றெடுப்பதற்கு சோசலிசம் என்ற தத்துவம் வலுவான முறையில் முன்வைத்து கொண்டுசெல்லப்படும் நிலையில், சோவியத் எதிர்ப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பு கும்பலின் கூப்பாடுகளுடன் சோசலிஸ்ட்டுகள் எந்தவிதத்திலும் ஒத்துப்போக வேண்டிய நிலையோ, அவசியமோ ஏற்படவில்லை. ஜெயப்பிரகாஷ் நாராயணனும் கூட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் துவக்க ஆண்டுகளில் மாசானி மற்றும் கும்பலின் இத்தகைய கம்யூனிச எதிர்ப்பு நிலைபாட்டை ஏற்க மறுத்து வந்தார். ஆனால் அந்தக் கும்பல் அவரை கடுமையான முறையில் நிர்ப்பந்தித்து வந்தது. வேறு வழியின்றி அவர் அதற்கு உடன்பட்டார். ஆனால் கேரளத்தின் ஒட்டுமொத்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் நாட்டின் இதர பகுதிகளில் செயல்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியினரும் கம்யூனிச எதிர்ப்பு முகாமிற்குள் இணைந்து கொள்ளும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் முடிவை பின்பற்ற மறுத்துவிட்டனர்.

ஏன் உடைந்தது?

இரண்டாம் உலகப்போருக்கு முன்னும் பின்னும் ஏற்பட்ட இந்த நிகழ்வுப் போக்குகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி இடையிலான ஒற்றுமையில் மிகத் தெளிவான உடைப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தன. உண்மையில் 1930களின் பிற்பகுதியில் நாட்டில் இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைப்பதற்கு இந்த இரண்டு கட்சிகளின் ஒற்றுமை உதவியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இரண்டு கட்சிகளும் கூட்டாக செயல்பட்டது கற்பனைக்கு எட்டாத விதத்தில் இடதுசாரி இயக்கம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வதற்கு குறிப்பிடத்தக்க முறையில் உதவி செய்தது. அப்படிப்பட்ட நிலையில், எந்தக் கட்சியின் நிலைபாடு அதிகபட்சமாக சரியானது என்று நிரூபிக்கப்பட்டதோ அதை பின்பற்றியிருந்தால் இந்த உடைப்பை  தவிர்த்திருக்க முடியாதா என்ற கேள்விகளும் எழுந்தன.

இரண்டாம் உலகப்போரின் பிற்பகுதியில், அதாவது சோவியத் ஒன்றியத்தை நாஜி ஜெர்மனி தாக்கிய பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட நிலைப்பாடுதான், இந்தியாவில் தேசபக்த மக்கள் திரளிடையே தற்காலிகமான முறையில் கட்சி தனிமைப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அன்றைய நிலையில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்த சூழலை இந்திய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை;  நாஜிகளுக்கு எதிரான யுத்தத்தை  “ஒரு மக்கள் யுத்தம்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரையறை செய்தது. மறுபுறத்தில் அன்றைய தினத்தில் இந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரும் எழுச்சியுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்து கொண்டிருந்தது; அந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி மக்களை அணிதிரட்டுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்து வந்தது. எனவே இந்தத் தருணத்தில் தங்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையிலான மோதலில் மக்களின் பேராதரவை தங்களால் பெற முடியும் என்று காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்கள் நம்பினார்கள்.

இந்த நிலையில், நாடு விடுதலையடைகிறது. 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலையடைந்த பிறகு, மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்வுப் போக்குகளின் பின்னணியில் எழுந்த சூழலை கணக்கிட்டு, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது தனது முன்னொட்டாக இருந்த ‘காங்கிரஸ்’ என்ற வார்த்தையை நீக்கி, தன்னை சோசலிஸ்ட் கட்சி என்று அறிவித்துக் கொண்டது. அதன் தலைவர்கள், புதிய ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற வேண்டுமென்று விருப்பத்துடன் செயல்பட்டார்கள். 1952ல் நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் முதலாவது பொதுத் தேர்தல் நடந்த போது, மேற்படி சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நாட்டின் ஒரே எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெறவும் சில மாநிலங்களில் ஆளுங்கட்சியாக ஆவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். 

ஆனால் தேர்தல் முடிவுகள் அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அமைந்துவிட்டன. இத்தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியானது படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல; கம்யூனிஸ்ட் கட்சியானது பிரதானமான இடதுசாரி எதிர்க்கட்சிக் குழுவாக வெற்றிபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமைதாங்கப்பட்ட ஐக்கிய முன்னணி, இரண்டு தென்னிந்திய மாநிலங்களில், அதாவது, திருவாங்கூர்-கொச்சின் மாகாணம் மற்றும் சென்னை மாகாணம் ஆகியவற்றில் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை அமைப்பதற்கான உரிமை கோரக்கூடிய அளவிற்கு வலுவான நிலைமையை பெற்றது; மேற்குவங்கம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு மாகாணங்களில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் பிரதான குழுவாக இடம்பெற்றது.

தேர்தலில் ஏற்பட்ட இந்தப் படுதோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் மிகக்கடுமையான தத்துவார்த்த அரசியல் குழப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் இருந்த பல கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தலைவர்கள் வேறு வேறு பாதையில் பிரிந்தார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வோதய இயக்கத்திற்கு சென்றார்; மாசானி காங்கிரசிற்குச் சென்றார்; அங்கிருந்து சுதந்திரா கட்சிக்கு தாவினார்; பட்வர்தன் சன்னியாசி ஆகிவிட்டார். இப்படி பலரும் பல திசையில் திரிந்தார்கள். எஞ்சியிருந்தவர்கள் சோசலிஸ்ட் கட்சியை பிரஜா கட்சி என்ற கட்சியுடன் இணைத்து பிரஜா சமாஜ்வாதி கட்சி என்பதாக உருவாக்கினார்கள். அக்கட்சியும் பிறகு பிரஜா சமாஜ்வாதி கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி எனப் பிரிந்தன. பின்னர் அவை இரண்டும் சோசலிஸ்ட் சமாஜ்வாதி கட்சியாக ஒன்றிணைந்தன. விரைவிலேயே அக்கட்சியும் உடைந்தது. படிப்படியாக உடைப்புகள் நடந்து பின்னர் கடைசியாக எஞ்சியிருந்த அனைத்து சோசலிஸ்ட் குழுக்களும் 1977ல் ஜனதா கட்சி என்ற பெயரில் ஒன்றிணைந்தன. அதற்குப் பிறகும் பல குழுக்களாக உடைந்து ஒரு குழு பழைய ஜனதா என்ற பெயருடன் செயல்பட்டது. 1952 முதல் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, சோசலிஸ்ட் கட்சியை கடும் நெருக்கடிக்குள்ளாக்கி முற்றாக சிதறடித்துவிட்டது.

- தொடரும்...
 

;