tamilnadu

img

குடிசையில் வாழ்ந்த புதிய அமைச்சரின் சர்ச்சைக்குரிய கடந்தகாலம்

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள், கடந்த மே 30ஆம் தேதியன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அப்போது  வயதான மெலிந்த நபர் பதவியேற்றுக் கொள்ளும்போது பலத்த கைத்தட்டல் எழுந்தது. அவரது பெயர் பிரதாப் சந்திர சாரங்கி. அவரை இதற்கு முன்பு ஒடிசா மாநிலத்திற்கு வெளியே யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆனால்,கடந்த வாரம் சமூக ஊடகங்களில் இவரது புகைப்படம் பரவலாக பகிரப்பட்டது. அதாவது பிரதாப் சந்திர சாரங்கி, அமைச்சர் பதவி ஏற்றுக் கொள்வதற்காக தனது குடிசையில் இருந்து வெளியே வருகிற புகைப்படம் தான் அது. இது பல்வேறு தரப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியது.ஆனால், தற்போது பிரபலமாகியுள்ள இந்த மனிதரின், கடந்தகால நிகழ்வுகள் என்ன?

பாதிரியார் - மகன்கள் எதிர்த்துக் கொலை
1997ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்தவ மிஷனரியை சேர்ந்த பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் இந்துத்துவா
கும்பலால் எரித்துக் கொல்லப்பட்டனர். அப்போது, பாஜகவின் பரிவார அமைப்பான பஜ்ரங் தளத்தின் தலைவராக இருந்தவர் தான் இந்த பிரதாப் சந்திர சாரங்கி.
அந்த கொலைகளுக்கு பஜ்ரங் தளம் அமைப்புதான் காரணம் என்று கிறிஸ்தவ சமூகத்தினர் குற்றம்சாட்டினர். ஆனால்,இது தொடர்பாக முதலில் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ விசாரணையில், அந்தக் கொலைக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீண்ட விசாரணைக்கு பிறகு, தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பஜ்ரங்தளத்துடன் தொடர்பு வைத்திருந்த தாரா சிங் மற்றும் 12 பேருக்கு 2003ஆம் ஆண்டுதண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நிலைமை மாறியது. தாரா சிங்கிற்கு வழங்கப் பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டது.அத்துடன் 11 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சட்டமன்றத்தின் மீது தாக்குதலில்...
கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக பிரதாப் சாரங்கி பல முறை நேர்காணல் அளித்துள்ளதாக ஒடிஷாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தீப் சாஹு  கூறுகிறார்.அதுமட்டுமல்லாது, 2002ஆம்ஆண்டு பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா குழுக்கள் ஒடிஷா மாநில சட்டமன்றத்தின் மீதுதாக்குதல் நடத்தின. அதில், கலவரம், தாக்குதல் நடத்தியது, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தது என பல்வேறு பிரிவுகளில் பிரதாப் சாரங்கி கைது செய்யப்பட்டார்.எனினும், அதையெல்லாம் விடுத்து, அவரது எளிமையான வாழ்க்கைக்காக சமூக ஊடகங்களில் இவர் பிரபலமாகிறார்.

“அவரது தொகுதி முழுவதும் சைக்கிளிலேயே சாரங்கி சுற்றி வருவார். ஒவ்வொரு கிராமமாக சென்று வாக்காளர்களை சந்திப்பார். புவனேஸ்வரத்தில் சட்டமன்றத்துக்கு, பெரும்பாலும் நடந்தோ, சைக்கிளிலோ தான் அவர் செல்வார். சாலையோர கடைகளில் அவர் சாப்பிடுவதையும், ரயில்வே நடைமேடை
களில் ரயிலுக்காக அவர் காத்திருப்பதையும் நாம் காண முடியும்” என்கிறார் சாஹு.

பிரதாப் சாரங்கி மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், அவரது தொகுதியில் உள்ள பாஜக பரிவாரங்கள் பட்டாசு வெடிப்பது, இனிப்புகள் வழங்குவது என கொண்டாட் டங்களில் ஈடுபட்டன. சிலர் இவரை ‘ஒடிஷாவின் மோதி’ என்று அழைக்கின்றனர்.சமூக ஊடகங்களில் ஒரே ஒரு புகைப்படம் வைரலாவதன் மூலம் பிரபலமாவதை வைத்து ஒருவர் குறித்த பிம்பம் பொது மக்களிடையே உருவாகிவிடுகிறது. அது அவர்களை ஹீரோவாக்கி விடுகிறது. ஆனால் அவருடைய கடந்தகாலம் என்ன? அவர் என்ன செய்திருக்கிறார்? போன்ற எந்த ஆழமான சிந்தனையும் இருப்பதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.