tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பிச் செல்வதற்கான செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டும் - சீத்தாராம் யெச்சூரி

புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான செலவுகளை முழுமையாக மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

புலம்பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதற்கான ரயில் கட்டணத்தை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது. இது தொடர்பாக சீத்தாராம் யெச்சூரி கட்சியின் முகநூல் காணொளியில் கூறியிருப்பதாவது:

கொரானா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட தேசிய அளவிலான சமூக முடக்கத்தின் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் நலன் பேணும் எந்தவொரு அரசாக இருந்தாலும், அவர்களின் பிரச்சனைகளைக் கண்டு, அவர்களுக்கு நிவாரணம் அளிக்க முன்வந்திருக்க வேண்டும். ஆனால், மிகவும் அவமானகரமான முறையில் மத்திய அரசு அவர்களைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

கடந்த 35 நாட்களாக எவ்வித வேலையும் இல்லாமல், தங்குவதற்கு இடமும் இல்லாமல் அவர்கள் மிகவும் சோர்ந்துபோயிருக்கிறார்கள். எப்படியாவது சொந்த ஊருக்குச் செல்லவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் செல்வதற்கான போக்குவரத்து வசதி எதையும் செய்துதர மத்திய அரசு தயாராயில்லை. கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம். பசி-பஞ்சம்-பட்டினியுடன் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றிருக்கிறார்கள். இவர்களின் பசி-பட்டினி நிலையைத் தீர்ப்பதற்கான அடிப்படைத் தேவை எதையும் அளித்திட மத்திய அரசு தயாராயில்லை. 35 நாட்களுக்குப்பின் இப்போது ரயில் விடுவதற்கு சம்மதித்திருக்கிறது. ஆயினும், அதில் பயணம் செய்ய வேண்டுமானால் கடந்த 35 நாட்களாக வேலையேதும் இல்லாது, பட்டினியுடன் பரிதவித்துக்கொண்டிருக்கம் இத்தொழிலாளர்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தகிறது. வழக்கமான ரயில் கட்டணம் கூட கிடையாது, அதற்கும் மேல் கூடுதலாக பணம் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. ஏனெனில் இது அவர்களுக்காக விடப்படும் சிறப்பு ரயில் என்று கூறுகிறது.

இவர்கள் அனைவரும் அரசின் செலவில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று நாம் கடந்த 35 நாட்களாகத் தொடர்ந்து கூறி வருகிறோம்.

ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து, மெட்ரோ போக்குவரத்து முதலானவைகள் பொதுப் போக்குவரத்துகளாகும். அவற்றை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதே நாகரிக அரசின் கடமையாகும். அதனை மக்களுக்கு சேவை செய்வதற்கே, உலகில் உள்ள நாகரிகமான அரசு எதுவாக இருந்தாலும் முன்வரும். ஆனால், மத்திய மோடி அரசோ இதில் லாப நட்டக் கணக்குப் பார்க்கிறது.

இவர்கள் என்ன சொல்கிறார்கள்? ஏற்கனவே இது தொடர்பாக 85 சதவீதம் மான்யம் அளித்திருக்கிறார்களாம். சமூக முடக்கத்தால் வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டியது, அரசின் முதல் அடிப்படைக் கடமையாகும்.  ஆனால் இவர்கள் தொடர்பாக எதையும் செய்ய மறுத்து வருகிறது. சமூக முடக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சமாளித்திட, வருமான வரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் 7500 ரூபாய் வீதம் மூன்று மாத காலத்திற்கு, ரொக்க மாற்று செய்திட வேண்டும் என்று கூறிவருகிறோம். ஆனால் இதுவரை எதுவுமே இந்த அரசு செய்திடவில்லை.  

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் அழுகிக் கொண்டிருக்கும் 7 கோடியே 70 லட்சம் (77 மில்லியன்) டன்கள் உணவு தான்யங்களை ஏழைகளுக்கு அளிப்பதற்காக மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என்று கோரி வருகிறோம். அதனையும் செய்திட இந்த அரசு மறுத்து வருகிறது. இவற்றையெல்லாம் செய்ய வேண்டியது மாநில அரசுகளே என்று கூறி, தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது.

எவ்விதமான திட்டமிடலும் இல்லாது, திடீரென்று ஒரு நான்கு மணி நேர கால அவகாசத்தில் சமூகமுடக்கத்தை அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைதான் இப்பிரச்சனைகள் தொடங்கியதற்கே காரணமாகும். முன்னெச்சரிக்கை ஏதேனும் செய்தீர்களா? மாநில அரசுகளுக்கு இது தொடர்பாக முன்கூட்டியே எதுவும் கூறினீர்களா? திடீரென்று வீதியில் நிறுத்தப்பட்ட தொழிலாளர்கள் எப்படித் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வார்கள்?

இவ்வாறு மத்திய அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதோடு மட்டுமல்லாமல், இவற்றையெல்லாம் மாநில அரசுகள்தான் செய்ய வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது. மாநில அரசுகளுக்கு, அவற்றுக்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளைக் கூட தர மறுக்கிறது. பிரதமர் தன் சொந்தப் பெயரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை வசூலித்து வைத்திருக்கிறார்.  இந்தப் பணம் எல்லாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? இந்தப் பணத்தை இப்போது பரிதவித்துக்கொண்டிருக்கிற நம் சொந்த மக்களுக்குப் பயன்படுத்தாமல், அவர்களின் பசி-பஞ்சம்-பட்டினி நிலையைப் போக்குவதற்குப் பயன்படுத்தாமல், பின் எதற்காக இந்தப் பணம்?

எனவேதான் நாங்கள் திரும்பத் திரும்ப கடந்த 45 நாட்களாகக் கூறிவருவது போன்று, புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டியது, மத்திய அரசின் பொறுப்பாகும். அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்றபின், மாநில அரசுகள் அவர்களின் எதிர்காலம் குறித்துத் திட்டமிட்டுக் கொள்ளும். கேரளம் போன்று சில மாநில அரசுகள் இவ்வாறு நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதற்கான முழுச் செலவுகளையும் மத்திய அரசே ஏற்க வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

(ந.நி.)